30.2 C
Jaffna
Tuesday, May 7, 2024

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்.

செம்பியர்கள் தரையிறங்கி
சென்ற செம்பியன்பற்றில்,

தரையிறங்கி வென்ற(26/03/Y2K)
செம்பியன் புதல்வனே!

தரையில் காலூன்றி நின்ற
தங்கத் தாரகையே!

சன்னங்கள் நடுவே வாசம் செய்த
உன்னதமே!

சமர்க்கள நுணுக்கம் உரைக்கும்
சமர்கள அகராதியே!

தமிழரெம் அன்பு நிறை தளபதியே!

புறநானூற்று வீரத்தை
விஞ்சும்
நெஞ்சுரம் கொண்டவனே!

பால்ராஜ்
அண்ணனே!

வீரவணக்கம்!

குடாரப்பில் தரையிறங்கி எழுதுமட்டுவாள் பெட்டிச் சமரில் பங்கு கொள்ள முன்பதாக பல மருத்துவ நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டது.

திட்டத்தின்படி சமர்க்களநாயகனுக்கு எப்போதுமே அருகில் நிற்க வேண்டுமென இரு களமருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஒருவர் களமருத்துவர் நிரோஜன் மற்றையவர் களமருத்துவர் ஜீவானந்தன்.

பெருங்கடலைத் தாண்டி குடாரப்பில் தரையிறங்கி எழுதுமட்டுவாள் பகுதியை அடைந்தவுடன் இருமருத்துவரையும் தன்னருகில் இருக்க வேண்டாம் எனப் பணித்து அதிகளவானோர் காயமடையும்(விழுப்புண்) இடத்துக்கு அனுப்பி வைத்தார்.

ஆம், தனது நலனை விட தனக்கு கீழே செயற்படும் சிறப்பு எல்லைப்படை வீரர்களையும், சாதாரண போராளிகளையும், அணித்தலைவர்களையும், இளநிலைத் தளபதிகளையும் சமர்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அதிகம் அதிகம் நேசித்தார்.

சமர்க்களநாயகன் தன்னை நேசிக்கவில்லை.

தனது உடலை மெல்ல மெல்ல பீடித்திருந்த நோயைக்கூட கவனிக்க நேரம் ஒதுக்கவில்லை.

மக்களையும் தலைவனையும் நேசித்த பெருந்தளபதியை வல்லாதிக்க வல்லரசுப்படையால் அல்லது வல்லரசுகள் எல்லோரிடமும் பயிற்சி பெற்ற இலங்கைப் படைகளால் இறுதிவரை வெல்ல முடியாமல் போனது.

பெரும் படைகளால் முடியாத காரியத்தை பின்னாளில் (20/05/2008) நோய் சாதித்தது.

மானுடம் போற்றும் மகத்தான மருத்துவமும் அந்தப் பெரும் வீரனின் விடையத்தில் தோல்வியே கண்டது.

‘அறம்’காத்த காவல்தெய்வமே-நினை
“அகம்”தனில் ஆழநினைந்து
“கரம்” தனைக் கூப்பி
“சிரம்” தாழ்த்துகிறோம்!🎖

நினைவேந்தியே
நிமிர்வோம்! 🖌