யாழிந்துவின் இன்னுமோர் இணையில்லா மைந்தன்

எண்ணிலடங்கா வேதனைகள் கடந்து அதி உன்னத மானுட சேவை செய்த எங்களின் தேவன்!

 முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறிய இறுதி நேரம் வரை உறுதியாக நின்று தன் பணிமுடித்த அருமை வைத்தியர் Dr.கிருபாகரன்!

தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திர சிகிச்சைமானி கற்கை நெறியினை நிறைவு செய்தவர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசான் துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது.

சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) மற்றும் உதவி மருத்துவர்களிற்கான (Assistant Medical Practitioner)கற்கை நெறிகள் என இரண்டு கற்கை நெறிகள் இங்கே பலரும் அறியாத வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதில் கிருபா அவர்கள் சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி(MBBS) கற்கையைத் தொடர்ந்தார்.

மூன்று வருடங்கள் யாழில் கற்கைநெறிகள் வெற்றிகரமாக த்தொடர்ந்தாலும், யாழ் குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட போது மருத்துவக்கல்வி தேக்க நிலையை அடைந்தது.

வன்னிக்கு புலிகளின் தளம் நகர்த்தப்பட்ட காலத்தில் மருத்துவக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவனாக(3rd MBBS) இருந்த கிருபாகரன் களங்களில் ஓர் முன்னணி களமருத்துவராக பணியாற்றிவர். 

களமருத்துவ செயற்பாட்டுக்கான பயிற்சிகளை சத்திரசிகிச்சை நிபுணர் சூரியகுமாரன் அவர்களிடம் பெற்றார்.

அதேபோல வைத்தியக் கலாநிதி எழுமதி கரிகாலன் மற்றும் தமிழீழ சுகாதார சேவைப்பணிப்பாளர் காசிலிங்கம் சுஜந்தன் அவர்களிடமும் மேலதிக பயிற்சிகளை பெற்றார்.

கடுமையான சண்டைகள் நடைபெறும் காலங்களில் களத்திலும் மற்றைய காலங்களில் வன்னிப்பெருநிலப்பரப்பில் காணப்பட்ட கிராமிய வைத்தியசாலைகளிலும்(Rural and Remote Hospitals)தனது மகத்தான மருத்துவ சேவையை மனநிறைவுடன் ஆற்றிவந்தார்.

சமாதான நாடகம் நோர்வே நாட்டின் தலைமையில் அரங்கேறிய காலத்தில் மீண்டும் யாழ் சென்று யாழ் மருத்துவபீடத்தில் தனது மருத்துவ சத்திரசிகிச்சைமானி பட்டப்படிப்பை வெற்றிகரமாகவும் திறமைச் சித்திகளுடனும் நிறைவு செய்தார்.

இயல்பாகவே அன்பும் பெரும் பண்பும் நிறைந்த இவர் பொதுமக்களையும் போராளிகளையும் ஆழமாக நேசித்தார். அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

சண்டை மிக உக்கிரமாக நடைபெற்ற காலங்களில் சத்திரசிகிச்சைக் கூடங்களில் மயக்க மருந்து கொடுக்கும் பொறுப்பு மிகுந்த கடினமான பணியைதானே தெரிவு செய்து மருத்துவ சேவையில் சிறந்து விளங்கினார்.

பூநகரி மண்ணை மீட்க நடைபெற்ற ஈரூடகத் தாக்குதலான தமிழர் சேனையின் தவைளைப் பாய்ச்சல் படைநடவடிக்கையில்(Operation Frog)பங்கேற்றவர். 

அந்த நடவடிக்கையில் படுகாயமடைந்தமையால் ஓர் கையையும் காலையும் மடிக்க முடியாத நிலையை அடைந்தார்.

பாதிப்படைந்த கையையும் காலையும் சத்திரசிகிச்சை ஒன்றின் மூலம் சீர்ப்படுத்த வெளிநாட்டில் இருந்து வருகை தந்த என்பியல் நிபுணர்கள் (Orthopedic Surgeons) பலர் முயன்றும் முடியாமல் போய்விட்டது. மனவலிமை மிக்க வைத்தியர் கிருபா அவர்கள் அவற்றை ஓர் குறையாக எண்ணாமல் தனது கடமைகளை ஓடியோடி செய்து முடிக்கும் போது பிரமிக்காதவர்கள் இல்லை எனலாம்.

தீவிரமான பொது வாழ்வில் கிருபா அல்லது கிருபாகரன் என்று அறியப்பட்ட இவரின் இயற்பெயர் கந்தசாமி தயாபரன் ஆகும். 

ஈர நெஞ்சம் கொண்ட இந்த வைத்தியர் “கோணாவில் கிருபா””வாசுகி கந்தசாமி” 
என்ற பெயர்களிலும் ஈழத்து இலக்கிய வானிலும் சிறகடித்தவர். மாங்கனித்தீவில் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளையும் சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் அதாவது 17/05/2009 ஆம் தேதி இலங்கைப் படையினரின் கட்டுப்பட்டுப் பகுதிக்குள் மனைவியுடன் வந்தவரின் எந்தவிதமான தொடர்புகளும் இன்று வரை கிடைக்கவில்லை.

மனைவி,
சகோதரங்கள் மற்றும் பெற்றோரால் இன்று விண்ணிலும் மண்ணிலும் தேடப்படும் ஒருவராக வைத்தியர் கிருபாகரன் உள்ளார்.