அறிஞர் வந்தார் – அறிவியல் மைல்கல் -03

524

மைல்கல் – 03

வானத்தைப் பார்த்தேன்

 

கிரேக்க தேசத்தின் கடற்கரைப் பிரதேசம்.
கி.மு. 384-ம் ஆண்டு.
ஓர் அறிஞர் பிறந்தார்.
தம் 62 வருட வாழ்வின் பெரும்பகுதியை அந்தக் கிரேக்கக் கடற்கறையிலே
செலவிட்டார்.
அந்த செலவு – உலக அறிவியலின் முதல் பெரும் வரவு.
அவர் – அரிஸ்டாட்டில்!

பேரலைகளுக்கும் சீறலைகளுக்கும் இடையே பாறைகள் நடுவே தேங்கிவிடும்
கடற்கரைக் குளங்கள்.
அவற்றைச் சுற்றி சுற்றி வந்து ஞானம் தேடின அறிஞரின் கண்கள்.
சிறு வயது. ஆனால் சீரிய அறிவு.

அந்தக் கரைக்குளங்களில் நண்டுகளும், சிப்பிகளும்,
ஜெல்லி வகை, நட்சத்திரவகை உள்ளிட்ட பலப்பல மீன்களும்
புழுக்களும் பூச்சிகளுமாய் —
உயிரினம் களிநடம் புரியக் கண்டார்.
மிகக் கவனமாய் அவற்றை ஆராய்ந்தார்.
ஆராய்ந்தவற்றை அழகாய் எழுதித் தொகுத்தார்.
தொகுத்த தகவல்களும் சரி, மேற்தகவல் தெரியாமல் தொடுத்த கேள்விகளும் சரி –
உயிரியலின் உயிர்நாடியாய் இன்றும் மெச்சப்படுகின்றன.

உயிர்வேற்றுமையின் (Biodiversity) மகிமையை உணர்ந்து உணர்த்திய முதல் மேதை.
அன்றே 560 வகை உயிர்வகைகளை அறிந்து பதிந்த உயிரியல் தந்தை!
உயிரியல் மட்டுமல்ல, உடற்கூறியல் (Anatomy), கருவியல் ( Embryology),
உடலியங்கியல் ( Physilogy) – இவற்றை அறிவியல் உலகத்துக்கு
அழைத்து வந்த அண்ணனும் இவர்தான்.
ஒரு கடற்சங்கின் உள்வாய் உறுப்புகளைப் பற்றி மிக விளக்கமாக அரிஸ்டாட்டில்
அன்று எழுதிய குறிப்புகள் – அதன் நுணுக்கங்கள்-
இன்றைய மேதைகளை வாய்பிளக்க வைக்கும் அளவுக்கு விரிவானவை.

அவரின் ஆராய்ச்சிகளின் எல்லைகள் பரந்தவை. ஈடுபாடுகள் ஆழமானவை.
முட்டைக் கருவின் படிப்படி வளர்ச்சி -மாற்றம்
இரத்தநாளங்களின் அமைப்பு, செயல்பாடுகள்
இப்படி அந்த அரிய மூளை சுரந்த அறிவுப்பால் ஏராளம்.

கணிதம், இயற்பியல், வானியலையும் விட்டுவைக்காத காயசண்டிகன் அவர்.
தர்க்கவியலைக் கண்டுபிடித்தவர் அவர் என்றால் அவரின் அறிவாற்றலைப்
பற்றி தயக்கமில்லாமல் ஒப்புக்கொள்வோம்தானே!
இயக்க விதிகள் என்று இவர் – (தவறாய்ச்) சொன்னதுதான்
பின்னாளில் கலீலியோ, நியூட்டன் வரும்வரை வேதம்.
பின்னாளில் ஏதென்ஸ் சென்ற அரிஸ்டாட்டில் நாடறிந்த பிளாட்டோவிடம்
சீடராகச் சேர்ந்தார். குருவும் சீடருமாய்ச் சேர்ந்து எதிர்கால அறிவுப்பயணிகளுக்கு
இரட்டை விளக்கங்களாய் பல நூறு ஆண்டுகள் விளங்கினார்கள்.
ஆனாலும் நம் அரிஸ்டாட்டில் குருவை மிஞ்சிய சீடர்!
குருவின் அறிவு பக்தி, மந்திர தந்திர சக்தி என்ற திரைகளால் சுற்றப்பட்டு மங்கி ஒளிர்ந்தது.
சீடரும் பக்தி உள்ளவரே. ஆனால் அந்த பக்தி நம்பிக்கைகள்
அறிவியல் தேடல்களை முடக்கிவைக்காமல் விலக்கி வைத்த விவேகி.
குரு கவிதை.
சீடர் தேற்றம்.
இன்றைய அறிவியலில் அடிப்படை ஆராய்ச்சி.
என்றுமே அறிவியலின் ஆரம்பம் – கவனித்தல்.
கவனித்து புரிந்து, புரியாததை ஆராய்ச்சியால் அகழ்ந்து
கண்டதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்து – என
அறிவியலின் பாடங்களை புரட்டும்போது,
அத்தனைக்கும் பால பாடம் —
கடற்குள உயிர்களைக் கண்ட அரிஸ்டாட்டிலின் கவனப்பாடம்!

ஏனோ உயிரியலின் பெரும்பாதியான தாவரங்களை அரிஸ்டாட்டில் ‘கண்டுகொள்ளவில்லை’!
காலம் திட்டமிட்ட கணக்கு அது!
அரிஸ்டாட்டிலின் ஒரு சீடர் மாவீரர் அலெக்ஸாண்டரின் கூடவே போர்முனைகளுக்குச் சென்ற
அரிஸ்டாட்டிலின் இன்னொரு சீடர் தியோப்ராஸ்டஸ் மூலம்தான்
தாவரவியல் தவழ்ந்துவர வேண்டும் எனத் திட்டமிட்டதால்தான்
காலம் அரிஸ்டாட்டில் கண்களிடமிருந்து
தாவரங்களைத் தப்பவிட்டது போலும்!