வெயில் கவிதை

மாடுகள் மேய்ச்சலை மறந்து
காய்ந்த வேப்பமரத்தின் கீழ்
சோர்ந்து படுத்திருக்கின்றன

பழஞ்சோறும் வெங்காயமும்
பசியடக்கி தந்த குளுகுளுப்பில்
மேய்ப்பனும் தூங்குகிறான்

காக்கைகள் கூட
இரைதேடலை
மாலைக்கு ஒத்தி வைத்து
கூடுகளில் போடுகின்றன
குட்டித் தூக்கம்..

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கரிசல் மண்ணும்
முட்செடிகளும்
அசையாமல் தூங்குகின்றன

சுழன்று எரிகின்ற சூரியனே
நீயும் கொஞ்சம்
உறங்கி ஓய்வெடு..