உங்கள் கால்களால் முடிந்தவரை எம்மோடு விடுதலைக்காய் நடவுங்கள்…

87

வாருங்கள் மக்களே!
உங்கள் கால்களால் முடிந்தவரை எம்மோடு விடுதலைக்காய் நடவுங்கள்…

இரவும் பகலும் அயராது விடுதலைக்காய் உழைக்க ஒரு இனம் தன்னை மீளவழிப்படுத்தும் ஓர் உன்னதபயணம்…

கனவுகளையெல்லாம் சிறைக்கம்பிகளுக்குள்ளே புதைத்துவிட்டு
கண்ணீரோடுவாழும் எங்கள் கண்மணிகளை மீட்கும் காலத்தின் பயணம்…

கேட்கவே நாதியற்றுக் கிடக்கும் எங்கள் சொந்தங்களுக்காய், நாங்கள் இருக்கின்றோம் என்று உறுதிசொல்ல ஒருபயணம்…

எங்களுக்காய் வாழ்ந்து, எங்களுக்காய்த் துன்பங்களில் உழன்று ஏணியாய் நின்று ஏற்றிவைத்தவர்க்காய் எழுச்சி கொண்ட பயணம்…

சிறைக்கதவுகளின் பின்னால் கண்ணீரோடும், கவலைகளோடும் வாழ்கின்ற எங்கள் உறவுகளுக்காய் ஒரு விடுதலை வழிப்பயணம்…

எங்களை மீட்பதற்காய் பாரச்சிலுவைகள் சுமப்பவரின் ரணங்களை ஆற்றிட வலிக்களையும் தாண்டிய நடைப்பயணம்…

நீதிமுகம்காட்டி, ஒரு இனத்திற்கே அநீதி இழைக்கும் கயமையின் முகத்திரையைக் கிழிக்க உறுதியோடு செல்கின்ற உண்மையின் பயணம்…

இன்னல்கள் கடந்தும் , இன்பங்களைமறந்தும் மண்ணின் மைந்தர்களாய் மாணவர் நாம் அணிதிரளும் விடுதலைக்கான நடைப்பயணம் …

வாருங்கள் மக்களே!
உங்கள் கரங்களையும் தாருங்கள்
உங்கள் கால்களால் முடிந்தவரை எம்மோடு
விடுதலைக்காய் நடவுங்கள்…
உங்கள் பிள்ளைகள் நாங்கள்
உங்களுக்காய் நடக்கின்றோம்,
வாருங்கள் எம்மக்களே! வாருங்கள்!

-காந்தள்-