எமது இனிய சகோதரனின் முதலாம் ஆண்டு திதி.

70

எமது இனிய சகோதரனின் முதலாம் ஆண்டுத் திதி.

மார்கழி 31 – 2023.. எங்கள் அருமைச் சகோதரன் கட்டுடல் தளர்ந்து கைகால் நலிந்து அறிவு சோர்ந்து கண்கள் சொருகி எங்களை மறந்த ஒற்றை நாள்.

எங்கள் மனங்களில் காரிருள் சூழ எங்கள் உயிர்நாடிகள் இடியோசை கேட்ட நாகம் போல் தடம்புரண்டு நின்றது. செய்தி கேட்ட அந்த நொடி இரத்தத்தில் இன்று வரை உறைந்து போயுள்ளது. தக்க தருணங்களில் எம்மைத் தாங்கி நின்ற நீ எம்மைத் இவ்வாறு தவிக்க விட்டுப் போவாய் என்று அன்றும் நாங்கள் எண்ணவில்லை.

உந்தன் இழப்புத் தந்த துயரம் எக்காலமும் எம்மை விட்டு அகலாது. கலத்தின் கட்டாயத்தின் பேரிலும் கடமைகளின் நிமித்தமும் எங்கள் அன்றாடத்தை பத்தொடு பதினொன்றாய்க் கடத்திக் கொண்டுள்ளோம்.

மருத்துவமனையில் நீ விடைபெற்ற அந்த நேரம் இன்று கூட மயக்காமல் செய்யும் இதய அறுவைச் சிகிச்சை வலியினை தந்து கொண்டே இருகிறது. இந்தக் கொடூர வலி உன்னை நாங்கள் மீண்டும் காணும் வரை இருந்து கொண்டே இருக்கும்.

தம்பி!

எங்கள் முன்னிலையில் முத்திப் பழுத்து முதுமை அடையாமல் முந்திச் சென்று விட்டாய். காய்ந்த மரமாய் அன்னையை தவிக்க விட்டு பச்சை மரம் நீ புதிய உலகம் புகுந்து விட்டாய்.

புதிய உலகில் நிம்மதியாய் இரு. மீண்டும் நாம் கூடி மகிழும் காலத்துக்காய்க் காத்திரு, எம்மோடு!!!

ஓம்.. சாந்தி.. சாந்தி.. சாந்தி..

-ஜெயமலர்-

சகோதரி