ம‌ணி அண்ணா!

மணியண்ணா !

நேற்றந்த செய்தி இடியாக விழுந்தது
நெருப்பாறு கடந்த பொழுதொன்று இருண்டது
விடியாமல் போகவோ விடிவெள்ளி சரிந்தது
எமனாக ஏனோ எரிகணை வந்து வீழ்ந்தது
மணி அண்ணா எனும் வீரம் மாவீரம் ஆனது
களம் நின்ற கண்டல்மண் மாரி மழை பொழிந்தது

லெப்டினன்ட் கேணல் மணி அண்ணா
நீங்கள் லட்சியத் தீப மெழுகண்ணா

விடுதலைக்கு உழைத்தவன் உயிர் கூடு பிரிந்தது
விழுதெறிந்த இனத்தின் வேர் ஒன்று அறுந்தது
விடை தெரியா நேரத்தில் விதை அன்று வீழ்ந்தது
விடிகாலைப் பொழுதில் எங்கள் விளக்கொன்று அணைந்தது
விழியூறி நதியாக குழிக்குள்ளே விதைத்தோம்
மாவீரத்தை எங்கள் நெஞ்சுக்குள் வைத்தோம்

லெப்டினன்ட் கேணல் மணி அண்ணா
நீங்கள் லட்சியத் தீப மெழுகண்ணா

குடும்பத்தின் தலைவனாய் புலி வீடு புகுந்தவன்
கடுஞ்சொற்கள் பேசாத கனிவான கரும்பிவன்
களம் நின்ற போதும் மென் மனதான தாயிவன்
ஓயாத அலை எங்கும் தடம் ஓயாது உழைத்தவன்
வவுனியா மண் தந்த சொத்தே மணியண்ணா
வரலாற்றில் நிலையாகி வாழ்வாயே அண்ணா

லெப்டினன்ட் கேணல் மணி அண்ணா
நீங்கள் லட்சியத் தீப மெழுகண்ணா

க.நேசன்
போராளி