என் மச்சான் பெயர் தவக்குமார்

“பகிரப்படாத பக்கங்கள்” எனும் பொத்தக ஆசிரியர் திரு இ.இ.கவிமகன் யாத்திருந்த பதிவு ஒன்று என் நினைவுக்கு வந்தது.

உங்கள் வாசிப்பிற்காக கீழே தருகின்றேன் படியுங்கள்…

சர்வதேசமே நெற்றியில் கை வைத்து யோசித்த வெற்றி சண்டை ஒன்றை புலிகள் செய்தனர்.

இன்றும் பல நாட்டு இராணுவ வல்லுனர்களை கேள்விக் குறியாக்கிய அந்த சண்டை வேறெதுவும் இல்லை.

தமிழர் சேனையின் பெரும் தரையிறக்கத் தாக்குதலான “குடாரப்பு தரை இறக்கம்” சர்வதேசத்திலே ஒரு மரபுவழி இராணுவமாக பரிணாமம் பெற்றிருந்த விடுதலை அமைப்பு இவ்வாறான தரை இறக்கத்தை செய்வதென்பது வரலாற்றுப் பதிவுகளில் முதல் தடவையாகும்.

குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற்ற போது இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த சிறிதளவு மக்கள் கடும் சண்டைக்குள் சிக்குண்டனர். அவர்களை பாதுகாத்து சண்டை பிடிக்க வேண்டிய நிலை எம்மவர்களுக்கு எழுந்தது. அதனால் பெரும் இடர்களை புலியணிகள் எதிர்கொண்டன.

யாருக்காக இந்த போராட்டமோ அவர்களை பாதுகாக்க பல பிரச்சனைகள் கண்முன்னே எழுந்தன. ஆனாலும் அத்தனையையும் தகர்த்தெறிந்து தமக்காக அமைக்கும் பதுங்ககழிகளை மக்கள் பயன்பாட்டுக்காக விட்டு வேறு பதுங்ககழிகளை உருவாக்கி சண்டையிட்டார்கள் புலியணிகள்.

மருதங்கேணி இராணுவமுகாம் பிடிபடாத அந்த முதல் மூன்று நாளும்(26,27,28- 03- 2000) மூன்று பக்கத்திலிருந்தும் சிங்கள வெறியர் தொடர் தாக்குதலை மேற் கொண்ட அதே நேரம், கிழக்கு பக்கம் முழுவதும் அமைந்திருந்த பெருங்கடலில் இருந்து டோறாக்களில் வந்த கடற்படையினர் தாக்கினார்கள். அந்த தாக்குதலில் பல மக்கள் காயமடைந்தார்கள். எம் போராளிகளும் பலர் பலமான காயங்களுக்குள்ளானார்கள்.

அவர்களுள் ஒரு நடுத்தர வயது அன்னையும் காயமடைந்து எங்கள் இடத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.

அவர் பலமாக காயமடைந்திருந்தார். ஒரு கால் பலமாக சிதைந்து கிடந்தது. தொடை நாடி முற்றாக அறுந்ததால் கடுமையான குருதிப் பெருக்கு ஏற்பட்டு Hypovolemic Shock Stage இல் காணப்பட்டார்.

உடனடியாக எம் மருத்துவ போராளிகள் தமது கடமையை ஆரம்பிக்கிறார்கள்.

அவசர அவசரமாக குருதி ஏற்றி(Emergency Blood Transfusion) உயிரைக் காப்பாற்றினார்கள் தமிழர் சேனையின் மருத்துவர்கள்.

சிகிச்சை நிறைவடைந்து மருத்துவர் அடுத்த காயத்துக்கான சிகிச்சைக்கு தயாரான போது, சுயநினைவு தெளிந்து எழுந்தார் அவர் (Recovered from unconsciousness) தம்பி உங்களை பார்க்கும் போது என் கணவரின் தம்பியின் நினைவு வருகுது. இந்திய இராணுவம் வஞ்சகம் செய்யவில்லை என்றால் உங்களைப்போல அவனும் இப்ப உயிரோட இருந்திருப்பான் தம்பி.

அவனை நான் தான் சின்ன வயதில் இருந்து வளர்த்தேன். என்னுடன்தான் அவன் எப்பவும் இருப்பான். என்னை அவனுக்கும் அவன எனக்கும் ரம்ப பிடிக்கும். விழிகள் கலங்க தனது மைத்துனனை பற்றி அவர் கூறிக் கொண்டிருக்க மனம் வலித்தது. யார் அக்கா உங்கள் மச்சான்? மருத்துவர் வினவ

என் மச்சான் பெயர் தவக்குமார். குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பத்து வேங்கைகளுள் ஒருவன். என்று கூறிவிட்டு மருத்துவரை பார்த்தபடி விழி கலங்கி நின்றார்.

தவக்குமார் அண்ணையின் திருவுருவத்தை கண்முன்னே கொண்டு வந்த மருத்துவர் சீர்மாறன் அவர்களின் தியாகம் ஒரு போதும் வீண் போகாது.

“அக்கா அமைதியாக இருங்கோ” என ஆறுதல் கூறிக் கொண்டே நம்பிக்கையுடன் தன் பணி தொடர்ந்தார்.

(லெப்டினன்ட் தவக்குமார்
சோமசுந்தரம் பாக்கியராஜா
முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்.)

வீரவணக்கம் பன்னிரு வீரர்களே!🎷