உடற்கூறியல் – அறிவியல் மைல்கல் – 15

370

 

ஆண்ட்ரியஸ் வெஸாலியஸ் (1514 -64)


உள்ளம் என்பது இதயம்,
எண்ணங்கள் உதயமாகும் இடம் இதயம்,
மூளை என்பது தேவையில்லாத சதைப்பிண்டம்,
அதில் பட்டாணி போல் இருக்கும் பினியல் சுரப்பியே ஆத்மாவின் இருப்பிடம்…

இவையெல்லாம் முன்னோர்கள் சொல்லிவைத்த பாடங்கள்.
பகுத்தறியாமல், ‘மனதில், பட்டதைச் சொல்லி-
சொல்லியவர்கள் சமூகத்தில் மரியாதைக்குரியவர்கள் என்பதாலேயே
அந்தக் கருத்துகளை மற்றவர் வழிபட்டு –
புரையோடிப்போன பொய்யான பழங்கதைகள்….

மறுமலர்ச்சி காலம் இவ்வகைப் பொய்வேர்களை ‘ஏன் எதற்கு எப்படி?’
என்ற களைவெட்டி, கடப்பாரைக் கேள்விகளால் புரட்டிப்போட்ட காலம்.
அறிவுத்தேடலால் ஆன்மீகப்போர்வை மூடநம்பிக்கைப் பொய்த்தகவல்களை
இனம்பிரித்த பொற்காலம்.

இதில் உடற்கூறியலில் மிகப்பெரிய சாதனை படைத்தவர் வெஸாலியஸ்.
ப்ரஸ்ல்ஸில் பிறந்தார். அரை நூற்றாண்டே வாழ்ந்தார்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் அறிவுக்கொடை தந்தார்.

பெல்ஜியத்திலும், பின்னர் பாரீசிலும் மருத்துவம் பயின்ற வெஸாலியஸ்,
இத்தாலியின் படுவா பல்கலையில் 23ம் வயதில் பட்டம் பெற்றார்.
பட்டம் பெற்ற பல்கலையிலேயே உடற்கூறியல் (அனாடமி) பேராசிரியராக
பணியேற்றார்.

சீக்கிரம் மடிந்துவிடுவோம் என்றுதானோ என்னவோ சில அறிவுச்சுடர்கள்
இளமையிலேயே எத்தனை சுடராய் ஒளிர்ந்து தீர்ந்துவிடுகின்றன..
நம் ராமானுஜம், பாரதி, பட்டுக்கோட்டை போல.

மனித உடல்களை அறுத்துப் பயிற்றுவிக்கும் ‘வேலையை’ கையால் தொடாமல்
கடைநிலை ஊழியர்வசம் விடுவதே அக்காலத்தின் ஆசிரியர் வழக்கம்.
ஆனால், புரட்சி மருத்துவர் வெஸாலியஸ் பதவி ‘கௌரவத்தை’ கைகழுவி
தாமே செய்து படிப்பித்து தம் கைகளை அழுக்காக்கினார்.
மாணவர்கள் அறிவு வெளிச்சமானது.

அவருக்கு 25 வயதாகும்போது இத்தாலி எங்கும் அவர் புகழ் பரவி நின்றது.
மரணதண்டனையில் மரித்தவர்களின் உடல்களை அரசாங்கம் அவர்
கல்விப்பணிக்காக அளித்து உதவியது.

30 வயதுக்குள் தம் ஊக்க உழைப்பால் கற்றவற்றைத் தொகுத்து
ஏழு தொகுதிகள் அடங்கிய அறிவுப்புதையலை,
‘மனித உடலின் அமைப்பைப் பற்றி’ என்ற மகாநூலாக வெளியிட்டார்.
முன்னோர்கள் கேலன் போன்றார் சொன்ன சில பிழைச்செய்திகளை
சரிப்படுத்தியவர் வெஸாலியஸ். – எடுத்துக்காட்டாக –

தாடை எலும்பு இரண்டல்ல – லாடம் போல வளைந்த ஒரு எலும்புதான்.
பித்தநாளம் திறப்பது இரைப்பையில் அல்ல, அதைத்தாண்டிய சிறுகுடலின் துவக்கத்தில்.

தவறுகளை களைந்ததால் மட்டும் அவர் சாதனையாளர் அல்லர்-
தத்துவம், மெய்ஞான நம்பிக்கைகள் வேறு –
ஏன் எப்படி என்று கேட்டு அறிந்து தெளிதல் வேறு.
இரண்டையும் போட்டுக் குழப்பும் போலிகளை அடையாளம் காணுங்கள்
என அறிவியலாருக்கு புதிய பாதை காட்டிய புரட்சிச் சிந்தனையாளர் அவர்.

மூத்த மருத்துவர்கள் கைப்பட பணிசெய்து கற்பிக்கவேண்டும்.
அதைக் கண்டு மாணவர்கள் பின்னர் கைப்பட செய்துபார்த்து பழகவேண்டும்
என்ற கல்விக்கொள்கையைக் கடைப்பிடித்து பரப்பிய அறிஞர் அவர்.

தசை, நரம்பு, நாளம் என அச்சு அசலாக படம் வரைந்து பாடப்புத்தகம் தந்த
அவருக்கு புதுவை ஜிப்மரில் சிலையுடன் சதுக்கம் உண்டு.
நம் மன்றத்தில் அவருக்காய் இந்த மைல்கல் உண்டு