வயாவிளான் ஞான வைரவர் ஆலயத் திருப்பணிக்கு நிதி உதவி வழங்கிய பிரான்சு ஒன்றியம்.

400

வயாவிளான் தெற்கு விடுவிக்கப்பட்ட பின், ஞானவைரவர் ஆலய புனருத்தானம் கட்டம் கட்டமாக நடந்து வருகிறது. அவ்வாலயப் புனருத்தானத்துக்கு பலரும் உதவி வருகின்ற நிலையில், வயாவிளான் மக்கள் ஒன்றியம் – பிரான்சும் தன் நிதிப்பங்களிப்பை வழங்கியுள்ளது.

பிரான்சு மண்ணில் வயவைக் காற்றாக வீசிக்கொண்டிருக்கும் வயவன்களின் கூட்டுறவான மக்கள் ஒன்றியம், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள உறவுகளுக்கு உதவும் கரங்கள் ஊடாக நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அவ்வரிசையில் எமதூரின் ஞானவைரவர் ஆலய புனருத்தானத்துக்காக ரூபாய் பத்தாயிரத்தை வழங்கி உள்ளனர்.

விடுபட்ட இடங்களில் நாங்கள் குடியேறுவதன் மூலம் எங்கள் காணிகள் எங்களுக்குத் தேவை என்பதை உறைக்கச் சொல்லி, வயாவிளானை முழுமையாக மீட்க முயலலாம். அதற்கான முதலடியாக ஆலயங்கள் மீண்டும் உயிரூட்டப்படல் வேண்டும்.

அதற்கு உதவிய பிரான்சு வாழ் வயாவிளான் மக்கள் ஒன்றியத்துக்கு பாராட்டுகள். இவ்விசாலப் பார்வையுடன் பயணம் தடையின்றித் தொடர வாழ்த்துகள்.