மதம்

592

மானுடர் வாழ்க்கையில் இரண்டற கலந்தது மதம். குழந்தைகள் முதல் வயோதிபர் வரை மத நம்பிக்கையுடன் வாழ்கின்றனர். சிலர் விதி விலக்காகவும் உள்ளனர். ஆனால் அவர்களும் குழந்தையாக இருக்கும் போதோ அல்லது எதோ ஒரு காலத்தில் மதத்தை நாடுகின்றனர்.

மனித மனம் எதையும் செய்ய வைக்கக் கூடியது. 

உலகில் எத்தனையோ நூற்றுக்கணக்கான மதங்கள் இருந்தன இருக்கின்றன. மக்கள் தங்கள் விரும்பிய மதத்தினை பின்பற்றுகின்றனர் அல்லது பின்பற்ற வைக்கப்படுகின்றனர்.

மதம் என்பது மிகவும் வலிமையானது. உலக இயக்கத்தையே தீர்மானிக்கிறது. மனித அறிவுக்கு எட்டாத சில நிகழ்வுகளை அல்லது செயல்களை மதத்தின் பெயர் கொண்டு அழைத்தனர். அது தவறும் இல்லை. ஒரு மரம் மூலம் பல மரங்கள் உருவாகிறது போல ஒவ்வொருவரும் தங்கள் நிலை, நாகரிகம், மொழி, இனம் பழக்கவழக்கங்களைப் பொறுத்து  நாடுகளுக்கு ஏற்ப பலவிதமான பெயர்களில் மதத்தை அழைக்கின்றனர்.

ஆனாலும் எல்லா மதங்களும் ஒரே நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன. நல்லவனாக இரு- நல்லதை செய்-அன்பு, பாசம், கருணை காட்டு எனத்தான் சொல்கின்றன. எந்த ஒரு மதமும் தீய கருத்துக்களை சொல்லவில்லை.

கேவலம்…  சிந்திக்கும் அறிவு கொண்ட மனிதர்கள் தான் தீய கருத்துக்களை பரப்புகின்றனர். தீய செயல்களைச் செய்கின்றனர். அல்லது செய்விக்கப்படுகிறார்கள்.

மதத்தின் பெயரால் உயிர்கள் அழிக்கப்படுவது கேவலத்திலும் கேவலம்.

 மதத்தின் பெயரால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மானிடர் அழிக்கப்படுகின்றனர். இதை செய்பவர்கள் சுயநலவாதிகள். அறிவற்றோர். ஏமாற்றுவதிகள். தீய எண்ணம் கொண்டோர் தான் மக்களின் மத நம்பிக்கையை அவர்களின் பலவீனமாக கருதி தாங்கள் நினைப்பதை, தங்களுக்கு வேண்டியதை நடத்தினர்; நடத்துகின்றனர்.

உயிர்மேல் உள்ள ஆசையால் மானிடர் மதத்தின் பெயரால் சொல்லப்படுபவைகளை அல்லது செய்யப்படுவைகளை நம்புகின்றனர்;  நம்பவைக்கப்படுகின்றனர்; பயமுறுத்தப்படுகின்றனர்.

மனிதர்களும் உடலுக்கு இறப்பில்லை என்பது போல் அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வோம் என்ற ஆசையுடன் விரும்பியோ விரும்பாமலோ, உண்மையோ பொய்யோ, சரியோ தவறோ என யோசிக்காது செய்கின்றனர். போகும் போது என்ன கொண்டு போகப்போறோம் என்பதுபோல் நடக்கின்றனர். உயிருக்கு உருவம் கொடுத்த உடலைக்கூட கொண்டு போக முடியாது.

சில மதங்களில் மண்ணில் புதைக்கின்றனர். சில மதங்களில் அது கூட இல்லை எரித்து சாம்பலாக்கப்படுகிறது.

 பிறப்பு-இறப்பு எங்களை மீறிய செயல் என்பதை உணர்த்து வாழும் போது அனைவரையும் சமமாக கருதி அன்பு-கருணையுடன் வாழ்ந்து அதன் வழியாக தங்கள் சார்ந்துள்ள மதத்தினை உயர்த்துவோம்-பாதுகாப்போம்.

அன்புடன்

வ.பொ.சு-

வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்