எண்ணமும் மின்சாரமும்

395

எண்ணங்களில் இருந்து மின்சாரம் எடுக்கலாம்!!!

என்ன உடனே விவாதம் ஆரம்பிச்சாச்சா!! சாத்தியமா? சாத்தியமில்லையா? என்று..

அடங்குங்க மக்களே! இது அது அல்ல.. எண்ணங்களின் பண்பிற்கும் மின்சாரத்திற்கும் பண்பிற்குமான ஒரு ஒப்பீடு இது..

எண்ணங்களின் பண்புகள் மின்சாரத்தின் பண்புகளை ஒத்தவை! மின்சாரத்தின் பண்புகளை தனியே சொல்ல முடியாது. மின் தடை, மின் காப்பி, மின்னூக்கி, மின்னிரட்டை, ட்ரான்ஸிஸ்டர் என பல பொருட்களின் வழியே மின்சாரம் பாயும் பொழுது ஏற்படும் விந்தைகளை மட்டுமே மின்சாரத்தின் பண்புகளாய் கொள்கிறோம்..

அதே போல பலவகைப் பட்ட மனங்களின் வழியே எண்ணங்கள் பாயும் பொழுது ஏற்படுத்தும் விளைவுகளே எண்ணங்களின் விளைவுகள்..

மின்சாரம் ஏற்படுத்தும் அதே விளைவுகளை எண்ணங்களும் ஏற்படுத்துகின்றன.. அடிப்படையை புரிந்து கொண்டால்…

எந்த எண்ணங்களை எவருள் செலுத்தினால் எப்படிச் செலுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என்று அறிய முடிந்தால்..

நாமும் மானுடப் பொறியாளர்தான்.. இது சிறிய ஆரம்ப கொள்கை அளவு ஆய்வு. அவ்வளவுதான்..

மனங்களை மேலோட்டமாக சில வகைகளாக பிரித்து ஒரே எண்ணம் ஏற்படுத்தும் விளைவுகளையும் மின்சாரம் பலவகைப் பொருள்களில் ஏற்படுத்தும் விளைவுகளையும் ஒப்பிடப் போகிறேன்.

இதில் ஒவ்வொரு மனங்களும் ஒவ்வொரு வகையில் உயர்ந்தவை.. அதே சமயம் நமக்கு பிடித்த விஷயங்களில் ஒரு வகை மனமாகவும், பிடிக்காத விஷயங்களில் வேறுவகை மனமாகவும் நாமிருக்கிறோம்..

இப்படி மனதை அறிந்து கொள்வதால் என்ன பயன்?

எதாவது இருக்கலாம்.. சொல்லவேண்டியதை மட்டும் சொல்லி, சொல்லத் தேவையில்லாத விஷயங்களை விட்டுவிட பயனுள்ள நிலையில் காலம் செலவழிக்கப்படும்.

எவ்வளவுதான் போராடினாலும் இழந்த ஒரு நொடியையும் மீட்க முடியாது. இருக்கும் நொடிகளை பயனுற செலவழிக்கலாம்..

ஓபன் சர்க்யூட் : சில விஷயங்களில் நம் மனம் இப்படித்தான் இருக்கிறது. சில விஷயங்களைக் கேட்கும் பொழுதே பார்க்கும் பொழுதோ அதானால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. நம் கண் முன்னே இருக்கும் பார்க்க மாட்டோம். படிக்க மாட்டோம்.

பல வயதானவர்களுக்கு இம்மாதிரியான மனம் சில விஷயங்களுக்கு அமைவதுண்டு.. டென்னிஸ் என்றால் தெரிந்து கொள்ளும் ஆர்வமே இருக்காது.. மகனோ மக்ளோ உட்கார்ந்து ஆரவாரமாய் ரசிக்க, ஒரு பேப்பரில் மூழ்கி இருப்பார்.. இது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூட இருக்காது..

இங்கே எவ்வளவு கரண்ட் வந்தாலும் ஒரு சின்ன எண்ணவோட்டமும் ஏற்படுவடில்லை. டிஸ்கனெக்டட் அவ்வளவுதான்..

பல சமயங்களில் சில்லறை விஷயங்களில் இருந்து நாம் நம்மை டிஸ்கனெக்ட் செய்து கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது..

உதாரணமாக சில விஷயங்கள் நமக்கு உபயோகமே இல்லை என்று நாம் தீர்மானித்திருப்போம். அதை படிக்கும் போதோ அதைப் பற்றிப் பேசும் போதோ அந்த வெறுப்புணர்ச்சியே மேலோங்கி நிற்கும். அதே விஷயத்தைப் பற்றி எண்ணவோட்டங்களை செலுத்தாமல் இருந்தால் நமது மனதின் எதிர்ப்பினால் உண்டாகும் இரத்த அழுத்தம், கோபம் போன்ற பல பக்க விளைவுகள் இருக்காது.

அதிகப் படியான ரெஸிஸ்டரின் மேல் செலுத்தப் படும் மின்சாரம் அந்த ரெஸிஸ்டரை சூடாக்கி பாழாக்குவதைப் போல பிடிக்காத விஷயங்களின் மீது செலுத்தப்படும் எண்ணங்கள் நம்மைச் சூடாக்கி பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

ஒரு டங்க்ஸ்டனைப் போல அந்தச் சூட்டிலேயே ஒளிர்ந்து மக்களுக்கு வழிகாட்டும் ஞானிகள் சிலர் உண்டு. அவர்கள் எரிந்து போகாமல் இருக்கக் கூட வெற்றிடம் தேவைப்படுகிறது.. சாதாரண மக்களாகிய நாம் நம் மனதில் அதிக எதிர்ப்பு உள்ள எண்ணங்களுக்கு ஓபன் சர்க்யூட்ட்டாக இருத்தல் அமைதி தரும். சக்தியை வீணாக்க வேண்டிய அவசியமில்லை,

ஒரு விஷயத்தில் இல்லாவிட்டால் இன்னொரு விஷயத்தில் அதே நேரத்தை உபயோகிக்கப் போகிறோம், இல்லையா? இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?

எனவே நம்முள் அதிக ரெஸிஸ்டன்ஸ் இருக்கும் பகுதியில் நம் மனதை ஓபன் சர்க்யூட்டாக வைத்துக் கொள்ள, வெறுப்புணர்வு என்ற சூடேறி சக்தியிழப்பு, நேரமிழப்பு போன்ற சேதங்களைத் தடுக்கலாம்.

புதிய தகவல்கள் தரும் பதிவினை யாரும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை என்பது என்னுடைய அனுபவம்.

இது நல்லதா கெட்டதா? இது நல்லதும் கூட கெட்டதும் கூட. நல்ல விஷயங்களை ஓபன் சர்க்யூட் மூலம் எண்ணவோட்டம் உண்டாகமல் தவிர்ப்பதின் மூலம் பல நல்லவைகளை இழந்து விடுகிறோம்

கெட்ட/தேவையில்லாத விஷயங்கள் ஓபன் சர்க்யூட் மூலம் நம்முள் எண்ணங்களை உருவாக்கததால் நமது சக்தி விரயமாவதில்லை.

எந்த விஷயத்திற்கு கவனம் செலுத்தக் கூடாது என அடையாளம் கண்டுகொள்வதின் மூலம் எண்ணவோட்டத்தில் சக்தி விரயமாவதைத் தவிக்கலாமே!!!

அடுத்தது ரெஸிஸ்டிவ் மைண்ட். தடை மனது.. நமக்குள் நாம் வளர்ந்த சூழ்நிலையாய் இயற்கையிலே அமைந்த ஒப்புக்கொள்ள மறுக்கும் தடை.

நாம் ஒரு நம்பிக்கை கொண்டிருப்போம் அதற்கு மாறான கருத்து வரும்பொழுது இம்மனம் விழித்துக் கொள்கிறது. மனதில் உள்ள எதிர்ப்புணர்வைப் பொறுத்து எண்ணங்கள் இம்மனதில் பாயும் பொழுது பலனளிக்கும் முன் அதிக சக்தி விரயமாகிறது.

இதனால் என்ன லாபம்? ஒரு உறுதியான முடிவை எடுக்க இப்படி ரெஸிஸ்டிவ் மனதில் பாயும் எண்ணவோட்டம் உதவுகிறது.. இது சரியா என்று ஒருவரிடம் ஆலோசனை கேட்பதாகக் கொள்வோம். நம் மனதில் உள்ள தடைகள் வலிமை குறைந்தவை.. ஆலோசனை சொல்பவரின் எண்ணம் இம்மனம் வழியே பாயும் பொழுது சிறிது சக்தி விரயம் உண்டு..
ஆனால் சரி (1), தவறு(0) என்ற முடிவை எடுக்க உதவுகிறது. இதே விவாதம் என்று வரும்பொழுது அதிக சக்தி விரயமாகிறது. ஆனாலும் விவாதத்தின் வலிமை அதிகமாக உள்ள பொழுது அதனால் ஒரு தீர்மானமான நிலைய எட்டவைக்க உதவுகிறது..

சர்க்யூட்டுகளிலும் இதைத்தானே சேய்கிறோம். வோல்டேஜ் சோர்ஸூடன் இணைக்கப் பட்ட ரெஸிஸ்டென்ஸ் புல்லப் ஆகவும், கிரௌண்டுடன் இணந்த ரெஸிஸ்டென்ஸ் புல்டௌன் ஆகவும் ஆகி விடுவதைப் போல தேவையான அளவு வலிமையான எண்ணவோட்டம் ஒரு உறுதியான முடிவை எடுக்க உதவுகிறது..

ஆக இதிலும் நன்மை தீமைகள் உண்டு.. தவறில்லை. எங்கு தெளிவு அதிகம் தேவைப்படுமோ அங்கு பயனப்டுத்தலாமே..

அடுத்தது… இந்தக் கட்டுரையை எழுதக் கரு கொடுத்த இண்டக்டன்ஸ்…

இண்டக்டன்ஸ் என்பது என்ன? காந்த புலம் தோற்றுவிக்கும் தன்மை கூடிய இரும்பு போன்ற ஒரு கோர் மீது எளிதில் கடத்தி கம்பி காயில் மாதிரி சுற்றப்பட்டிருக்கும். காயிலில் மின்சாரம் பாயும் பொழுது கோரில் காந்தப் புலம் உண்டாகிறது, இந்தக் காந்தப்புலம் மின்னோட்டம் மாறும் அளவிற்கேற்ப மாறுகிறது.. இதனால் காயிலில் மின்னழுத்தம் உயர்கிறது

இதேப் போல்தான்.. எண்ணங்கள். மற்றவரை வசீகரிக்கக் கூடிய சிந்தனைத் திறன் உள்ளவர்களைச் சுற்றி ஓடும் போது, அவர்களின் கோர் மனதில் உண்டாகும் காந்தப் புலத்தினால் அந்த எண்ணத்திலே மேலும் அதிக அழுத்தமான செய்திகள் சேருகின்றன.. நம் மன்றத்தில் சிலரின் பின்னூட்டங்கள் அந்தத் திரியின் மதிப்பைக் கூட்டுகின்றன இல்லையா? கவிதைப் பட்டறை, சில கவிதைப் பகுதிகள், விவாதப் பகுதிகளில் எண்ண மாற்றங்கள் எவ்வளவு அருமையான கருத்துக்களை கொடுத்திருக்கிறது. கடியையே கடிப்பது கூட இந்த வகைதானே!!!

மின் தேக்கி – கெபாசிடர், மனங்கள் எப்படித் தெரியுமா, நல்ல எண்ணங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு தேவைப் படும் பொழுது வெளிப்படுத்துவது.. சொல்லப் போனால் நம்ம பென்ஸ் மனம் போலன்னு வச்சுக்குங்களே..

ஆக அடிப்படையில் இருக்கும் ரெஸிஸ்டர் / கெபாசிடர் / இண்டக்டர் போன்ற அமைப்புகள் நம் மனதிலும் இருக்கின்றன. இவை மனதில் எண்ணவோட்டங்கள் பாய்வதிணால் மாறுதல்களை ஏற்படித்துகின்றன..

இவை அடிப்படைகள்…

தூண்டப்பட்ட மின்சாரம் – இண்டக்டன்ஸ் மூலம் ஏற்படுவது போல எண்ணங்கள் நம்முள் சுற்றிச் சுற்றி வருவதினால், பலம் வாய்ந்த எண்ண அலைகளை நம்மால் உருவாக்க முடிகிறது..

இந்த எண்ண அலைகள் இதே போல் ஒத்த மனதுடையவரின் மனதையும் எண்ணவோட்டத்தில் தூண்டி விடுகிறது..

அதாவது இரு இண்டக்ட்டன்ஸ் மனதுடையவர்கள் மியூச்சுவல் இண்டக்ஷன் மூலமாய் டிரான்ஸ்ஃபார்மர்களாய் மாறுவது..

முகமாறுதல்களைப் பார்த்தே இவர் மனதில் இன்ன எண்ணம் ஓடுகிறது என்று ஒரு சிலரைப் பற்றி நம்மால் கணித்துவிட முடிகிறது..

உதிர்க்கப்படும் ஒற்றைவார்த்தை எண்னச் சுழலில் சிக்கி ஒரு கதையாகிவிடுகிறது.. நம்முள் ஓடும் அந்த எண்ணவோட்டம் நம் அருகில் இருக்கும் இன்னொருவரின் எண்ண ஓட்டத்தையும் தூண்டுகிறது..

இதே போலத்தான் கெபாசிடர் மனமும்.. தனக்கு பிடித்த அலைவரிசையில் எண்ணங்கள் கிடைக்கும் பொழுது சட்டெனச் சேகரித்துக் கொள்வது.. பிடிக்காத அலைவரிசையில் வந்தாலும், சற்று அலை ஏற்றதாழ்வுகள் இருந்தாலும் செய்திகளைச் சேர்த்துக் கொண்டு, தேவையான பொழுது தருவதாலும், இதி இண்டக்டர் மனதுக்கு ஒரு நல்ல துணைஆக அமைகிறது.. இவ்விரு மனம் கொண்டோர் இணைவதினால், எண்ணங்கள் ஃபில்டர் செய்யப்பட்டு, குறிப்பிட்ட வகை எண்ணங்கள் மட்டும் வெளிவருகின்றன.

இதே போலத்தான் ரெஸிஸ்டிவ் மனமுடையவரும், கெபாசிடர் மனமுடையவரும் சேரும் பொழுது அலைபாயும் எண்ணங்கள் குறைந்து (AC) உறுதியான எண்ணங்கள் மட்டுமே வெளிவருகின்றன. (DC)

ஒவ்வொருவரின் மனமும் இப்படி RLC நெட்வொர்க் கொண்டுள்ளது, ஒவ்வொரு விஷயத்திற்கும், இவைகளிம் இணைப்பும், மதிப்பும் வேறுபடுகின்றன,

இதை அறியாமலேயே உபயோகிக்கும் நாம் அறிந்து உபயோகிக்கலாம்..
அறிந்து உபயோகித்தால் எண்ணங்களின் சக்தியை நம் எண்ணப்படி மாற்ற முடியும்..