திலீபம் ; தமிழரின் ஆத்மபலம்

சன்னங்கள் சன்னதம் கொள்ளும் சமர்க்களங்களில் விநியோக வழிகள் தடைப்பட்டு உணவு இல்லாமல் பசியால் வாடிய தருணங்களில் ஊரெழு உவந்த எங்கள் உன்னதத்தினை நினைத்ததுண்டு.

பசித்திருக்கும் நாட்களில் எல்லாம் தியாக தீபத்தின் மனோதிடத்தையும் தியாகத்தையும் யான் மட்டுமல்ல பொதுமக்கள், போராளிகள் என நாங்கள் எல்லோருமே நினைப்பது வழமை.

தியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் அண்ணாவை நினைத்தாலே போதும் ஒரு புதிய உத்வேகமும்உற்சாகமும் உடலெங்கும் கொடிவிட்டுப் படரும்!

வளம் மிக்க வன்னியிலிருந்து கடல்வழியாக குடாரப்பில் தரையிறங்கிய முதல் நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் மட்டுமே கொண்டு சென்ற சின்னஞ் சிறிய பொதி உணவு கைகொடுத்தது.

கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, தாளையடி ஊடான தரை வழிப்பாதை கைப்பற்றப்படும் வரை களத்தில் ‘கடும்பசி’ எனும் நிலைமையும் சூழ்பகையுடன் எமைச் சூழ்ந்திருந்தது.

பசியிருந்த அந்த நேரங்களில் திலீபன் அண்ணரின் கொடும்பசியினை நினைத்த போது எங்கள் அருகிருந்த அற்ப”பசி ” இருந்த இடம் தெரியாமல் ப(ம)றந்து போனது.

ஆம்,

உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும் உத்வேகம் பிறந்தது!

வார்த்தைகளால் வடிக்கமுடியாத கடினமான அந்த நேரங்களில் எல்லாம் எங்கள் ஆன்மா பலம் பெற்றது!

ஆம், அன்றைய செங்களத்தில் மட்டுமல்ல”முள்ளிவாய்க்கால்” காலத்தில் பசித்திருந்த நேரத்திலும் திலீபன் அண்ணாவின் பெரும்பசியினை நினைத்ததுண்டு.

தமிழ்த்தேசியத்தின் ஆன்மா காயப்படும் போதெல்லாம் “திலீபம்” எனும் அருமருந்தெடுத்து ஒத்தடம் போட்ட சம்பவங்கள் எண்ணிறைந்தவை ஆகும்.

அஃதே,

எங்கள் தலைமுறை ஆயிரம் கடந்தாலும் “திலீபம்” எனும் அருமருந்து எம்மினத்தோடு சாகாவரம் பெற்று வாழும் என்பது திண்ணம்.

காதோர முடிகள் முழுவதுமே நரைத்துவிடும் நாற்பத்து ஐந்து (45) அகவைகளை கடந்து செல்லும் இந்தப் பொழுதுகளில் “கந்தசஷ்டி” விரதமும் அனுஷ்டிக்க என் இல்லத்தரசி கற்றுத் தந்துள்ளாள்.

கந்தன் அருள் வேண்டும் நாட்களில் முருகன் நினைவில் வருவதைவிட திலீபன் அண்ணரே அடிக்கடி அகக்கண்களில் தெரிகின்றார்.

தமிழீழத்திலும், தாய்த்தமிழகத்திலும் தமிழர் வாழும் நிலங்கள் எங்கணும் அ(இ)ன்று போல் இனி வரும் எல்லா நாட்களிலும் “திலீபஒளி”சுடர்விட்டுப் பிரகாசிக்கும்!

திலீபன் உலகத்தமிழரின் ஆன்மபலமாய்
என்றும் இருப்பான்
எங்கள் தியாக தீபம் பிரகாசிக்கும்!🙏

(அர்த்தமுள்ள ஓவியம் கொண்டு எந்தன் மனக்கதவினைத் திறந்து வைத்த ஓவியர்
புகழேந்தி அவர்களுக்கும் நன்றி)