சுவடுகள்

44

* சுவடுகள்….*

காலில் புண்பட்டால் உனக்கும் வலித்திருக்கும், ஆனாலும் காடுமேடெல்லாம் உன் கால்கள் நடக்கத் தயங்கவில்லை, ஆதலால் என் கானகமும் நிலமும் களவுபோகாமல் காக்கப்பட்டது…

உப்புநீரலைகள் உன்முகத்தில்பட்டு எரிச்சலூட்டியிருக்கும், ஆனாலும் கடல்மேல் நீ கொண்டகாதல் வற்றிப்போய்விடவில்லை, ஆதலால் என் கடலின் எல்லைகள் கவனமாகப் பாதுகாக்கப்பட்டது.

வானில் பறப்பதை ஒரு கனவாக எண்ணி நாட்கள் கடந்திருக்கும், ஆனாலும் அந்த வல்லமைதனை வரவழைத்துக்கொண்ட சிந்தனை உன்னுள் உறங்கிக்கிடக்கவில்லை,
ஆதலால், வானமும் ஒருநாள் என் வசப்படுகின்ற வரம்கிடைத்தது…

வேட்டொலியும், பீரங்கி முழக்கமும் உன்னைப் பயமுறுத்த முயற்சித்திருக்கும்.
ஆனாலும் வீரனே உன்னுள் ஒலித்த சுதந்திரமுழக்கத்தை அவற்றினால் வெற்றிகொள்ளமுடியவில்லை. ஆதலால் எல்லோத்திசைகளிலிருந்தும் விடுதலையூற்று பிரவாகமெடுத்தது…
*-காந்தள்-*