இயற்கை எனும் இளைய கன்னி

333

என் பக்கம் குவிந்தது
காதல் பிரபஞ்சத்து
ஆதவனின் கண்வீச்சு
சற்றே தீவிரமாய்!!

நெஞ்சத்துள் இறுகி இருந்த
காதல் பனிமலை உருகியது.
குருதிக் கடலில்
காதல் மட்டம் உயர்ந்தது.
சிறுதட்டுகள் உரசிக்கொண்டன.

உணர்வு மண்டலத்துள்
பெருக்குடைத்தது காதல்
விசித்திர சுனாமிபோல்!

நரம்பு நதிகளின் வழி
இளமையுடன் ஓடியது.
இழையக் குளங்களை நிரப்பியது.
தேக வயலெங்கும்
மோகனச் செழுமை படர்த்தியது!

என்னைச் சுற்றி
காதல் சூழ் கொண்ட மேகம்!

தென்றல்கள் வருடியது..
ஒன்று மட்டும் தழுவியது..
பொழிந்த மழையை ஏந்திகொண்டன
என்னில் திறந்த வழிகள் யாவும்!

எங்கும் பசுமை
தென்றல் வந்த தடயங்களாய்
என்னில் பசுமை
தென்றல் விட்டுச் சென்ற தடயங்களாய்!!