காலமெல்லாம் கரம்கோத்து சேர்ந்து நடைபோடத் தடையேது லால் கமகே ஐயா/අය්යා?

“முறிவுக்காயங்களை வைத்தியசாலைக்கு அனுப்ப முன்னர் சரியாக நிலைப்படுத்தவேண்டும்”.

அவ்வாறு நிலைப்படுத்தத்தவறின் முறிவடைந்து கூர்விளிம்பாய் உள்ள என்புகள் அருகே உள்ள மெல்லிய இழையங்களை(Soft Tissues) பாதித்துவிடும்.

குறிப்பாக என்புகளுக்கு அருகாலே
செல்லும் இரத்த நாடிகளை(Arteries) எங்கள் என்புகளே கிழித்துவிடும். இதனால் இரத்தப் பெருக்கு மென்மேலும் அதிகரிக்கும்.

அதைவிட குறிப்பிட்ட அந்த உறுப்புக்கான குருதி விநியோகம் முழுமையாக தடைப்படும்.

சில வேளைகளில் காயம் ஏற்பட்ட அந்த காலையோ கையையோ இழக்க வேண்டிய துயர் கூட ஏற்படலாம்.

அவயங்களில் அதாவது கைகள் அல்லது கால்களில் முறிவு காணப்பட்டால் அவற்றை அசையாது நிலைப்படுத்துவதற்கு உங்களது Trauma kitஇல் பலவகையான Plastic Splints உண்டு.

நிலைப்படுத்துவதற்கு மட்டைகள் இல்லாத சந்தர்ப்பகளில் என்ன செய்வதென ஓர் மனித நேயப்பணியாளர் எழுந்து கேட்டார்?

முடிவடைந்த காலை முறியாதகாலுடன் சேர்த்து நிலைப்படுத்தி அசைவுகளைத் தடுக்கலாம்.

Proper Splints இல்லாத பல சந்தர்ப்பங்களில் கட்டில் சட்டம் போன்ற சிறிய நேரான பலகைகளையும் கூடப் பயன்படுத்தலாம்.

பனம் மட்டையின் கருக்கைச் சீவிவிட்டு அவற்றை வைத்து முறிவுக் காயங்களை ஆதாரப்படுத்திவிட்டு அனுப்பிய காலங்களும் உண்டு எனக்கூறினேன்.

எல்லோரும் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருந்தனர்.

பலர் முகம் வாடி சோகம் ததும்பியது!
சிலர் மற்றையவர்கள் அறியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டனர்!

அலை வந்து தாலாட்டும் அழகிய மாங்கனித்தீவின் மூவினத்தவரும் அங்கே இருந்தோம்.

கொஞ்சம் வயதில் முதிர்ந்த வெள்ளை நிறம் கொண்ட சிங்களப் பணியாளர் ஒருவரின் கலக்கம் அதிகமாக இருந்தது.

பல விதமான உணர்வுகளால் முற்றுகையிடப்பட்ட நான் அவரை அதிகம் கவனித்தேன்.

வகுப்பறையை விட்டு வெளியே வரும் போது ஓடி வந்து “நீங்கள் இந்தத் துயரங்களை ஏன் விரிவாக
எழுதக் கூடாது?” என்று கேட்டார்.

2011ஆம் ஆண்டு மன்னார் பண்டிவிரிச்சான் மகாவித்தியாலயத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் அலுவலர்களுக்கான Pre-Hospital Training Course இன் போது நடைபெற்ற சம்பவம் இது ஆகும்.

ஆம்!

இன,மத எல்லைகள் கடந்த மானுடநேயமும், புரிந்துணர்வும், நல்லெண்ணமும் உங்கள் எல்லோரிடமும் தேவையான அளவில் இருந்துவிட்டால்…

காங்கேயன்துறையிலிருந்து காலிக்கும் காலியிலிருந்து காங்கேயன்துறைக்கும் காலமெல்லாம் கரம்கோத்து சேர்ந்து நடைபோடத் தடையேது லால் கமகே ஐயா/අය්යා?