பிழையின்றித் தமிழ் பேசுவோம்; எழுதுவோம் – மொழிப்பயிற்சி – 10

525

சொற்றொடர் அமைப்பு:-​​
பத்தி​ரிகையாளரும்,​​ வானொலி,​​ தொலைக்காட்சி ஊடகத்தாரும் பள்ளி ஆசிரியர்களும் கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று சொற்றொடர் ​(வாக்கியம்)​ அமைப்பு. முக்கியமாக ஒருமை, பன்மை மயக்கம் சொற்றொடர்களில் இருத்தல் ஆகாது. ஆங்கிலத்தில் ஒருமை, பன்மை மயங்க எழுதினால் ஏளனம் செய்கிறோம். இடித்துரைக்கிறோம். தமிழில் மிகத் தாராளமாக இப்பிழையைப் பலரும் செய்கிறார்கள்.

1.​ பிரேசில் நாட்டில் பெரும்பாலான இடங்கள்​ வெள்​ளத்​தால் சூழப்பட்டுள்ளது. ​(ஒரு செய்​தித்​தா​ளில்)

2.பாகிஸ்தான் அரசிடம் இந்தியாவின் கவலைகள்​ தெரி​விக்​கப்​பட்டது.
இடங்​கள் என்​னும் பன்​மைச் சொல்​லுக்​கேற்​பச் சூழப்​பட்​டுள்​ளன என்​றும், கவ​லை​கள் என்​னும் சொல்​லுக்​கேற்ப தெரிவிக்கப்பட்டன என்றும் முடிக்க வேண்டும் என்று அறியாதவர்களா?​ அல்லது அக்கறையின்மையா?

1.ஒவ்வொரு சிலையும் வண்ண வண்ணமாக அழகாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.​ ​(ஒரு தொலைக்காட்சி செய்தி)
2.இந்த மன்றத்தின் செயற்பாடு ஒவ்வொன்றும் பாராட்டிற்குரியன ​(ஒரு சிற்றிதழில்)
ஒவ்வொரு சிலையும் எனும் ஒருமைக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், செயற்பாடு ஒவ்வொன்றும் எனும் ஒருமைக்கேற்ப பாராட்டிற்குரியது என்று முடித்தல் வேண்டும்.

இந்த நுட்பமெல்லாம் நம்மவர் சிந்திப்பதில்லை.
‘அர்’ எனும் பலர்பால் விகுதி கொண்டு முடிய வேண்டிய வாக்கியங்களைச் செய்தி படிப்பவர் சிலர் முழுமையாகப் படிக்காமல் அஃறிணைப் பன்மை கொண்டு முடிக்கிறார்கள். இது ஒரு பாணி போலும்.

1.விழாவில் ஏராளமான மக்கள் கூடியிருந்தன.​ ​(ர்)
2.​ பலநாட்டுப் பிரதிநிதிகளும் வந்திருந்தன.​ ​(ர்)
முடி​வில் உள்ள ‘ர்’ ஒலியை விழுங்கிவிடுகிறார்கள். கேட்கும் நம் செவியில் அச் செய்தி தேளாய்க் கொட்டுகிறது.

ஒரு கட்டுரையாளர் எழுதியுள்ளார்:​- ”ஓய்வாக இருக்க முடியாத நிலையில் ஏதாவது​ வேலைகளைச் செய்து கொண்டிருப்பீர்கள்”.
இந்த வாக்கியத்தில் ஏதாவது என்பது ஒருமை,​​ வேலைகள் என்பது பன்மை. ஏதாவது வேலையைச் செய்து கொண்டிருப்பீர்கள் என்று எழுத வேண்டும். சொற்றொடர் அமைப்பில் கருத்துப் பிறழ உணருமாறு நேர்ந்துவிடக் கூடாது.

ஒரு நூல் மதிப்புரையில் ஓர் எழுத்தாளர் எழுதியுள்ளார்:-
”மனுதர்ம சாஸ்திரம் பற்றித் தவறான எண்ணங்கள் கொண்டுள்ளவர்க்கும் மேலும் இதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்படும்”.

“மனுதர்ம சாத்திரம் பற்றித் தவறான எண்ணங்கள் கொண்டவர்கள் -​ அந்த எண்ணங்களை மாற்றிக் கொள்ளவும் மேலும் இதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும்” என்று இருந்தால் இச்சொற்றொடர் சரியானதாகும். மதிப்புரை செய்துள்ளவரின் கருத்து இதுவாகத்தான் இருக்க முடியும். எழுதப்பட்டுள்ளபடி ‘தவறான எண்ணம் கொண்டவர்க்கும் இந்நூல் பயன்படும்’ என்பது தவறான கருத்தன்றோ?

ஒரு விழா பற்றி அறிவிப்பாளர் சொல்லுகிறார்:-
”இன்றைய விழா சரியாக மாலை ஆறு மணியளவில்​ நடை​பெ​றும்.” இத்​தொ​ட​ரில் பிழையுள்ளதா?
உள்ளது.
எப்படி?
சரியாக என்று சொன்னால் ஆறு மணி அளவில் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? சரியாக ஆறு மணிக்கு என்றோ ஆறு மணியளவில் என்றோ ​ சொல்லுதலே சரியாகும். சரியாக என்று சொல்லிவிட்டு ஏறத்தாழ ​(அளவில்)​ என்பது முரணன்றோ?

ஒரு கூட்டத்தில் பேச்சாளர் பேச்சைத் தொடங்குகிறார்:-
”இங்கு கூடியுள்ள அனைவர்க்கும் என்னுடைய முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. அதென்ன?​ வணக்கத்தில் முதற்கண் வணக்கம்,​​ இடைக்கண் வணக்கம்,​​ இறுதிக் கண் வணக்கம் என்றெல்லாம் உண்டா? என்னுடைய வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன் என்றால் வாக்கியம் சரியான பொருளில் அமையும். வணக்கத்தை ஏன் தெரிவித்துக் கொள்ள வேண்டும்? அனைவர்க்கும் வணக்கம் என்றோ,​​ அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன் என்றோ தொடங்கினால் அழகாக இருக்குமே.

தமிழ் வளரும்….