துச்சாதனர் சபையில் சீதைகள்

210

முகநூல்க்களம் பரபரப்பாகவும் சூடாகவும் உள்ளது. வட தாயகத்தில் இராணுவ அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரியாவிடை வைபோகத்தில் தமிழ்மக்கள் பலர் கண்ணீர் சிந்தி உள்ளனர். ஒரு சிலர் கட்டிப் பிடித்துக் கதறி அழுதுள்ளனர். இவர்களுள் பெண்களும் அடக்கம்.

சிங்களவன் ஒருவனுக்காக இவர்கள் எப்படி அழலாம். அவனை எப்படித் தொடலாம். எங்களை அழித்தவனை, எங்கள் தமக்கையர், தங்கையர் கற்பைத் தின்றவனை எப்படி மேன்மைப்படுத்தலாம் என்றவாறு தொடங்கி கண்டபடி திட்டித் தீர்த்து விட்டனர்.

இதில் வேடிக்கை என்னவெனில் கண் கசிந்த பெண்களின் ஒழுக்கம், ஆண்களின் கண்ணியம் எல்லாம் நிர்வாணப்படுத்தப்பட்டு விட்டன, முக நூல் போராளிகள் சிலரால்..

அந்த அதிகாரி எப்படிப்பட்டவன் என்று தெரியவில்லை. ஒரு வேளை முகநூல்ப் போராளீஸ் சொல்வதைப் போல் பெண்களை படுக்கைக்கு அழைத்து அதற்குப் பிரதியுபகாரமாக அம்மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருக்கலாம்..  அந்தப் பெண்கள் கூட வேறு வழியின்றி பாஞ்சாலிகள் ஆகி இருக்கலாம்..

ஆனால், அவர்களை முகநூலுக்கு இழுத்து துகிலுரிந்து மானபங்கம் செய்த  துச்சாதனர்கள் குறிப்பிட்ட  முகநூல் போராளிகள்.  உங்கள் பார்வையில் பாஞ்சாலிகளாக இருக்கும் அவர்களை விட துச்சாதனர்கள் நீங்கள் பாவிகள்.

என்னைப் பொறுத்தவரை தாயகத்தில் வாழும் பெண்கள் கோகுலத்தில் வசிக்கும் சீதைகள். முடிந்தால், அவர்களை சிறை மீளுங்கள். இல்லையா, நீங்கள் கூறுவதைப் போல் பாஞ்சாலிகளாகவேனும் வாழ விடுங்கள். சபைக்கு இழுத்து வந்து துகிலுரித்து இனத்தை அழிக்காதீர்கள்.