மொழிப்பயிற்சி – பிழயின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம் – 3

662

பாகம் – 2

https://vayavan.com/?p=8127

6. சில்லரை :-

ஒரு ரூபாயில் சிறிய பகுதிகளோ, நூறு, ஆயிரம், பல்லாயிரம் எனும் எந்தத் தொகையிலும் வரும் சிறிய பகுதிகளே அவை. சிலவாக அறுக்கப்பட்டவை (பிரிக்கப் பட்டவை) ஆதலின் சில்லறை என்றே எழுதுதல் வேண்டும். சில அரை எனில் அரை அரையாகத்தான் அளவிடல் முடியுமன்றி கால், அரைக்கால் என்னும் சிறியவற்றை அது குறிப்பிடல் இயலாது. 10 காசு 50 காசு முதலியவை ஒரு ரூபாயில் சில்லறை; 50 ரூபா 100 ரூபா ஆயிரத்துள் சில்லறை. இப்படியே அடுக்கிஸ் செல்லலாம். ஆதலின் சில்லறையே சரியான பொருள் கொண்ட சொல்.

7. கருப்பு :-

கருப்பினத்தலைவர், கருப்புப்பணம் என்றெல்லாம் செய்தித் தாள்களில் பார்க்கிறோம். கறுப்பினத்தலைவர், கறுப்புப்பணம் என்று வல்லினம் இட்டு எழுத வேண்டும். கருப்பு என் இடையினம் போட்டால், பஞ்சம் என்று பொருள். கரிய, கருமை என்னும் போது இடையின ‘ர’ வரினும் கறுப்பு என்று எழுதும் போது மட்டும் வல்லின ‘று’ தான் போட வேண்டும்.

தமிழ்ப் பேரகராதி, சிற்றகராதி எதிலும் சரிபார்த்துக் கொள்க. கருப்புப் பட்டியல் எனில், பஞ்சப்பட்டியல் என்றே பொருளாம்.

8. மேனாள் :-

இப்போதெல்லாம் முன்னாள் அமைச்சர், முன்னாள் தலைவர் என்று குறிப்பிட்டு வந்த இடங்களில், மேனாள் அமைச்சர், மேனாள் தலைவர் என்று எழுதுகிறார்கள். புற நானூற்றில் வந்துள்ள மேனாள் என்னும் சொல்லுக்கு நேற்றைக்கு முந்திய நாள் (மேல்+நாள்) எனும் பொருளே காண்கிறோம். ‘நெருநல் உற்ற செருவிற்கு…..’ என்ற வரியின் முன் ‘மேனாள் உற்ற செருவிற்கு…..’ எனும் வரி இடம் பெற்றுள்ளது.

முன்னாள் எனில் அது நேற்றாகவும், பல நாள் முன்னாகவும், பல திங்கள், பல ஆண்டு முன்னதாகவும் பொதுத் தன்மை கொண்டுள்ளது. இந்தப் பொருள் மேனாளில் இல்லை. இதனை எழுதத் தெரியாதவர் மேநாள் என்று எழுதிவிட்டால், அது மே தினத்தைக் (மே-1) குறிக்கும். பழைய நாளில் பதவியில் இருந்தோரை முன்னாள் என்றே குறிப்போமாக.

9. இயக்குனர் :-

இயக்குநர், நடத்துநர், ஓட்டுநர் போன்ற சொற்களை இப்போதும் இயக்குனர், நடத்துனர், ஓட்டுனர் என்று பிழையாக எழுதுகிறார்கள். இச்சொற்களைப் பிரித்து (இயக்கு + அன் + அர்) பின் சேர்த்தால் இயக்கனர், நடத்தனர் என்றுதான் வரும் (‘கு’ வில் உள்ள உகரம் கெட்டு ‘க’ ஆகிவிடும்). மாறாக இயக்கு, நடத்து, ஓட்டு எனும் சொற்களோடு ‘நர்’ எனும் சிறப்பு விகுதியைச் சேர்த்தால், எந்த மாற்றமும் வராது. ‘கேட்குந போலவும், கிளத்துந போலவும்’ என்று தொல்காப்பியம் தொடங்கி, உப்புவிலை பகருநர், மீன்விலை பகருநர், நெடுந்தேர் ஊருநர், செம்பு செய்நர், மணி குயிற்றுநர் என்று சிலப்பதிகாரத்திலும் கண்டு கொள்க.

10. உளமாற :-

நீடுழிவாழ உளமாற வாழ்த்துகிறேன் என்று சிலர் எழுதுகிறார்கள். உள்ளம் மாறிவிட வாழ்த்துகிறேன் என்பது இதன் பொருளாகும். (உளம் + மாற) ஆனால், நினைத்த பொருள் இதுவா? மனம் நிரம்ப வாழ்த்துகிறேன் என்பதுதானே நம் கருத்து. ஆதலின் மனம் + ஆர (ஆர = நிரம்ப, பொருந்த) எனும் பொருளில் ‘மனமார வாழ்த்துகிறேன்’ என் எழுதுதல் வேண்டும்.

11. அளப்பறியன :-

அவர் ஆற்றிய பணிகள் அளப்பறியனவாகும் என்றும் எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறோம். அவர் ஆற்றிய பணிகள் அளப்பதற்கு முடியாத (நிறைந்த) பணிகள் என்பதுதானே நாம் கருதும் பொருள். அப்படியாயின் அளப்பரியன என்றுதானே எழுதிட வேண்டும். இதை விட்டு அளப்பறியன என்றால் ஒரு பொருளும் இன்றிக் குழப்பம் தோன்றும். எதை அறிய…..? எதை அளக்க….?

அளப்ப + அரிய = அளப்பரிய என்பதுதான் சரியான சொல்.

12. அன்னாளைய தலைவர் :-

முன் ஒரு சமயம் தலைவராய் இருந்தவரைக் குறிக்க ஒரு சிலர் அன்னாளைய தலைவர் என்று ஏடுகளில் எழுதி வருகிறார்கள். அ+நாள்=அந்நாள் என்பது சரியான சொல். அந்தநாள் தலைவர் என்னும் பொருளை மனதில் எண்ணி, அன்னாள் என்று எழுதுவது பிழையன்றோ? இது ஏதோ ஒரு பெண்ணின் பெயரைப் போல் தோன்றுகிறதே! இவ்வாறே இப்போது தலைவராய் இருப்பவர் இந்நாள் தலைவர் ஆவார். இவரை இன்னாள் ஆக்கிவிட்டால், இல்லாதநாள் தலைவர் ஆகிவிடுவார். கவனம் வேண்டும்.