வடிவேலு நடித்து பட்டி தொட்டி எல்லாம் சிரிப்பு வெடி வெடிச்சு பொங்கல் கொண்டாடிய படம் 23 ஆம் புலிகேசி. அந்தப்படத்தில் வரும் புலிகேசி போட்ட விடுகதைகள் இரண்டுக்கு விடை..

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம் குலசேகரனை
அவன் யார் ???

கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால், அத்தோடு யசோதைக்குத் தான் கொடுத்த வரத்தைக் காக்கவும், தாமரைச் செல்வியை (பத்மாவதி – தாமரையில் பிறந்தவள்) மணக்கவும் ஸ்ரீநிவாசனாக அவதரித்த போது நடந்தது இது.

குலசேகரன் என்றால் குலத்தின் சிகரமானவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம். செல்வத்தில் உயர்ந்தவன் குபேரன். எனவே ஸ்ரீநிவாசனுக்கு குலசேகரன் குபேரன்.

குபேரன் கிட்ட பதினான்கு இலட்சம் வராகன் (இங்க பாருங்கள் இதுவும் வராகம் தான்) கடன் வாங்கித்தானே பத்மாவதியை மணக்கிறார் ஸ்ரீநிவாசன்.

அந்தக் கடனை அடைக்க கலியுகம் முழுதும் முழுதும் EMI கட்டணும்.

அந்தக்கடனை அடைக்க என்ன வழி? குலசேகரனான குபேரனை வெல்ல என்ன வழி?

அதைத்தான் சொல்கிறது இந்த சின்ன விடு-கதை

பன்றி – வராகப் பெருமாள்
குன்று – வெங்கடாசலம்

ஸ்ரீநிவாசர் தங்க வெங்கடாசல மலையை அளிப்பவர் வராக பெருமாள். அதனால் அவருக்கு நன்றி சொல்லி அவருக்கே முதல் வனக்கம் உரித்தாக வேண்டும் என்றும் சொல்கிறார் ஸ்ரீநிவாஸர்

பின்னர் வெங்கடாத்ரி என்னும் ஏழாவது குன்றின் உச்சியில் நிற்கிறார்.

இப்படி நின்று அருள் புரியும் அவர் இன்று உலகின் மிகவும் பணக்காரக் கடவுளாக இருக்கிறார். குபேரனையே மிஞ்சுகிறார்.

அதாங்க

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம் குலசேகரனை..

தலையைச் சுத்துதா.. பிதற்றல் என்று நினைக்கின்றீர்களா.. இல்லை.. ஒரு சிறு விடயத்தை பல கோணத்தில் காணும் திறனை வளர்க்க இப்படியான கற்பனைக் கடிகள் உதவும்.

அடுத்த விடு-கதை..

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

நகைச்சுவையான ஒரு விடயத்தை நாம் படித்த ஆன்மீகக் கதையுடன் தொடர்பு படுத்தி கடியாகப் பார்ப்பதில் என்ன இருக்கிறது? இது திறனை வளர்க்க உதவும் என்றே கருதுகிறேன்.

இந்த விடைகளை கண்ட விதமும் சில கணக்குகளுக்கு விடை காணும் விதமும் ஒன்றாக இருப்பதை உங்களால் அறிய முடிந்தால்… இப்படியான பதில் தேடுவதால் ஆய்வுத்திறன் அதிகருக்கும் என நீங்களும் கருதினால் இன்னும் தொடரலாம்.