புளியங்குளம் புரட்சிக்குளம் எனவாகிய போது புன்னகைத்தபடி பணி செய்த புரட்சியாளன்!

நாங்கள் இன்னுமோர் இணையில்லா நண்பரை இழந்து தொண்ணூறு நாளில் நினைவு பெட்டகத்தை திறந்து பார்த்தேன்!

அங்கு கண்டதை ஒரு பைத்தியம் போல உளறுகின்றேன் கேளுங்கள்!

ஆம், குருதியை சாதாரண அறை வெப்பநிலையில் (Room Temperature) பாதுகாக்க முடியாது.

செங்குருதியை பாதுகாத்து வைப்பதற்காய் சிறிய குளிர்சாதன பெட்டியையினையும் (Fridge) களமுனை வைத்தியசாலைகளில் பயன்படுத்துவது வழமை.

களமுனையின் பின்னே குருதியை பாதுகாத்து வைத்து அதிக குருதிப்பெருக்கு (Severe bleeding) உண்டானவர்களுக்கு குருதி ஏற்றி உயிர்காக்கும் உன்னத நடவடிக்கை 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அன்றிலிருந்து குளிர்சாதன பெட்டியினையும் அதற்கான மின் விநியோகம் செய்வதற்கு சின்னஞ் சிறிய மின்பிறபாக்கிகளையும் (Generators) நெருக்கமான களங்களில் கூட பயன்படுத்துவோம்.

சின்ன மின்பிறபாக்கிகளின் சத்தம் சிறியதாயினும் காவலரண்களைவிட்டு வெளியே வேவு நடவடிக்கையில் ஈடுபடும் எதிரியின் காதுகளில் வீழ்ந்துவிடாது தடுப்பதற்காகவும் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் அனேகமாக அவை முயற்கொம்பாகி விடுவதுண்டு.

சத்தத்தை தடுப்பதற்கென தனியான சின்னஞ் சிறிய கிடங்கு வெட்டி அதனுள் வைப்பதன் மூலம் மின்பிறப்பாக்கியின் இரைச்சல் சத்தத்தை குறைத்து பாதுகாப்போம்.

இதனை முன்னெச்சரிக்கையான நடவடிக்கையையும் தாண்டி எமை மோப்பம் பிடித்தன உலகின் முன்னணி வல்லரசுகளிடம் சிறப்பு பயிற்சி பெற்ற எதிரியின் அணிகள்.

1998 ஆம் ஆண்டு ஜெயசிக்குறுய் காலத்தில் புளியங்குளத்தில் எமது களமுனை வைத்தியசாலையை தாக்கப்பட்ட போது மருத்துவர் ஜதீந்திரா/அருள் முதல் தடவை விழுப்புண் அடைந்தார்.

அஃதே,

புத்தாயிரம் ஆண்டாகிய இரண்டாயிரமாம் (2000) ஆண்டில் ஆனையிறவு மண் மீட்கப்பட்ட பின்னர் பளைபகுதியில் அமைந்திருந்த களமுனை வைத்தியசாலையில் இரண்டாது தடவையாகவும் படுகாயம் அடைந்தார்.

காலனை கண்டஞ்சாத கரிகாலன் தலைமையில் தமிழீழ மருத்துவபிரிவு புத்தெழுச்சி பெற்றிருந்த அந்த காலமது.

ஆம்,

அன்று இரண்டு தடவைகளுக்கும் மேலாக “எமன்” அவனும் முழுமூச்சுடன் முயன்ற போதும் எங்கள் நண்பரை தன்னோடு அழைத்துச் செல்ல முடியவில்லை.

இன்று இதயமில்லா எமன் வென்றுவிட்டான்.

விசேட வைத்திய நிபுணர்களும், இடர்மிகு காலத்தில் இவரது தோளோடு தோள் நின்று பணி ஆற்றிய வைத்திய அதிகாரிகளும் தாதியர்களும் பெருமளவு நவீன உபகரணங்களும் என பல வளங்கள் கொண்ட மருத்துவம் எமனிடம் தோற்றுவிட்டது.🥲