வெள்ளத்தில் தத்தளிக்கும் எங்கள் சொந்தங்களுக்கு கரம் கொடுப்போம் வாருங்கள்.

189

பெருஞ்சேதங்களை அடைவதும் அதிலிருந்து மீண்டெழெந்து வருவதுமாக உள்ளது எங்கள் பெரு நிலபரப்பு. அந்நிலத்தில் நிலை கண்டு மேக இராட்சசன் அழுதால் கூட அழிவை சந்திக்கும் நிலம் அப்பெருநிலம்.

வளங்கொழிக்கும் அந்நிலத்தில் பலமும் கொழிப்பதால்தான் எத்துணை அழிவைக் கண்டாலும் அடங்காப் பற்றாக எழுந்து நிற்கிறது வன்னி நிலம்.

மீண்டும் ஓர் இயற்கைப் பேரிடர் அந்நிலத்தை தாக்கி உள்ளது…

சொட்டு சொட்டாய், பாடு பட்டுச்சேர்த்த அத்தனையையும் இழந்து உடுக்க மாற்றுத்துணி கூட இல்லாமல் எம் மக்கள் தவிக்கின்றார்களாம்,

கடந்த 48 மணிநேரமாக நீடிக்கும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள இடரால் 2 ஆயிரத்து 788 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அவர்களில் ஆயிரத்து 829 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 775 பேர் இடர்பெயர்ந்து 40 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வந்திருக்கின்றது.

தொடர்ந்து பெய்யும் மழையினால் இரணை மடு குளம் அதன் அளவினை கடந்தும் மேலேறியதனால் முன்னறிவிப்பில்லாமல் திறந்து விடப்பட்டிருக்கின்றது. திங்கள் வரை மழை தொடர்ந்து பெய்யும் என்பதனால் திறக்கப்ப்ட்ட குளம் உடையும் வாய்ப்பிருப்பதாகவும் சொல்கின்றார்கள். .

அதன் பின் ஏற்படக் கூடிய பெருஞ்சேதம்கற்பனைக்கெட்டாததாகக் கூட இருக்கலாம்.

இந்நிலையில் பல தன்னாவர்கள் களப்பணியாற்றத் தொடங்கிவிட்டனர். அவர்களுடன் இணைந்தோ அல்லது வேறு வழியிலோ வெள்ளத்தில் தத்தளிக்கும் எங்கள் சொந்தங்களுக்குக் கை கொடுத்து கரையேற்ற வேண்டியது எங்கள் எல்லோரினதும் கடனையாகும்.

அவசர நிவாரண உதவித்தேவைகளென கள நண்பர்கள் பட்டியலிட்டதை இங்கே பகிர்கிறேன்.

-குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் (உலர் உணவுகள், பால்மா வகைகள், ஆடைகள், பம்பர்ஸ், படுக்கை, நுளம்பு வகை போன்றவை)

பெண்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள்.

சகலருக்குமா உலர் உணவுகள், படுக்கைகள், போன்றவை..

இடப்பெயர்வுகள் பலவற்றைக் கொண்டு கற்றுக்கொண்டார்கள் நாம். உடனடித்தேவைகள் என்னென்ன என விபரிக்கத் தேவையில்லை.. அதே போல் உதவுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லா உதவும் மனம் கொண்டவர்கள் நாம்..

விரைந்து களமிறங்கி வெள்ளப்பெருக்கை எதிர்கொள்வோம்..