எல்லாம் நன்மைக்கே..

775

காட்டு இராசா சிங்கம் விபத்தில் சிக்கி கால் விரலொன்றை இழந்தைக் கேள்வியுற்ற மற்ற மிருகங்கள் அவரைப் பார்க்கச் சென்றன.

ஒவ்வொரு மிருகமும் ராசாவை நலம் விசாரித்து ஆறுதல் சொல்லின. நரியார் நலம் விசாரித்து விட்டு “எல்லாம் நன்மைக்கே” என்று ஆறுதல் கூறினார். சிங்க ராசா கோபம் கொண்டார்.

”நான் விரல் இழந்தது நன்மைக்காம்” என்று ஆத்திரம் கொண்டு நரியைப் பிடித்துக் கட்டி வைத்தார். காயம் ஆறினாலும் சிங்கராசாவால் முன்பு போலக் கம்பீரமாக நடக்க முடியவில்லை. நொண்டி நொண்டி நடந்தார்.

காலம் ஓடியது. வேட்டைக்குச் சென்ற சிங்கராசா கூண்டொன்றில் அகப்பட்டார். அண்டை நாட்டரசனின் வீரர்கள் வைத்த கூண்டு அது. அந்நாட்டு இளவரசனுக்கு பயிற்சி கொடுக்க தேவையான சிங்கத்தைப் பிடிப்பதற்கு வைக்கப்பட்ட கூண்டு அது.

காவலர்கள் கூண்டுக்குள் அகப்பட்ட சிங்கராசாவைக் கண்டதும் மகிழ்ந்தார்கள். அவரை சங்கிலியால் கட்டி வெளியே எடுத்தார்கள். சிங்கராசா நொண்டி நொண்டி நடந்து கூண்டை விட்டு வெளியேறினார்.

காவலர்கள் முகத்தில் அதிருப்தி படர்ந்தது. நொண்டிச் சிங்கத்தை வைத்து இளவரசருக்கு பயிற்சி அளிக்க முடியாதென முடிவு செய்து சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் விட்டனர்.

தப்பினேன் பிழைத்தேனென மகிழ்ந்த சிங்க ராசாவுக்கு நரியார் சொன்ன “எல்லாம் நன்மைக்கே” ஞாபகத்துக்கு வந்தது. நரியாரை விடுதலை செய்யார்.

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்றெண்ணினால் மனதில் மகிழ்வும் தெளிவும் உண்டாகும். காலப்போக்கில் நடப்பவை எல்லாமே நன்மையாகவே இருக்கும்.