நாளொரு குறள் – 69

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
செய்யுள் :9

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

ஏழு குறளை பொதுவாக வைத்த வள்ளுவர், தந்தை பற்றிச் சொல்லும் பொழுது நன்றிக்கடனை மட்டுமே வைத்தார்.

தாயைப்பற்றி சொல்லும் பொழுது அவர் அதைச் சொல்லவில்லை, தாயின் மகிழ்ச்சியை மட்டுமே சொல்கிறார்.

தாய் ஒரு குழந்தையை பெற மிகவும் கஷ்டப்படுவாள். ஆனால் பெற்று அதன் முகத்தைப் பார்க்கும் மகிழ்ச்சிக்கு ஈடாக இன்னும் ஒரு மகிழ்ச்சி இல்லை. அதனாலேயே அவள் அடுத்த குழந்தை பெறத் தயாராகி விடுகிறாள்.

அதை விட மகிழ்ச்சி இருக்க முடியுமா?

இருக்கிறது என்கிறார் வள்ளுவர். தன் மகன் சான்றோன், ஒரு உதாரண புருஷன் என பிறர் சொல்வதைக் கேட்கும் தாய், அதை விட இன்னும் பெரிதும் மகிழ்வாளாம்.

தந்தைக்கு அறிவைச் சொன்னார் வள்ளுவர். அன்னைக்கு அன்பைச் சொல்கிறார்.

அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு

வாலி எழுதி ஜெயலலிதா பாடிய வரிகளின் ஆரம்பம் இந்த இரு குறள்கள்தானோ?