நாளொரு குறள் – 56

நாள் : 56
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
செய்யுள் :6

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

பெண் என்பவள் யார்? இதற்கு விளக்கம் சொல்லியாக வேண்டிய கட்டாயம் அப்பொழுதே வள்ளுவருக்கு வந்து விட்டது.

பெண் தன்னைக் காத்துக் கொள்ள வல்லவள். அவள் பிறரைச் சார்ந்திருக்கிறாள் என்ற கண்ணோட்டம் தவறு.
தன்னைக் கொண்டவரைப் பேணுபவள். கொண்டவர் என்றால் கணவன் மட்டுமல்ல, கணவன், கணவனின் குடும்பத்தார் மற்றும் குழந்தைகள் அனைவைரின் நலமும் பேணிக் காப்பவளும் பெண்.
சொல் காப்பவள் பெண்.. இதில் மூன்று பொருள் உண்டு…

ஒரு கெடு சொல் சுடு சொல் வராமல் காப்பவள்..
புகழ் சொல் அழியாமல் சென்றுவிடாமல் காப்பவள்..
சொன்ன சொல்லின் வழி நின்று அந்த வாக்கினைக் காப்பவள்..

மூன்றுமே சொல் காத்தலே… பெண் எவ்வகைச் சொல்காப்பவள்..

தகைசான்ற என்று அடைமொழி சேர்த்திருக்கிறார்..

பெருமைக்கு சான்றாக இருக்கும் என்று சொல்கிறார் வள்ளுவர். மூன்றுமே பெருமை சேர்ப்பதே ஆகும்.

பழியின்மை, புகழ், வாக்கு நலன் இப்படி மூன்றும் சொல்காத்தல்..

இது மட்டுமல்ல, சோர்விலாள் என்று முடிக்கிறார்..

பெண் என்பவள்

தன்னைக் காத்துக் கொள்ளும் திறம் பெற்றவள்.
தன் குடும்பத்தவரை பேணிக் காப்பவள்.
பழியின்மை, புகழ், வாக்கு நலன் இவற்றைக் காப்பவள்
இவ்வளவு செய்தும் அவள் சோர்வதே இல்லை. அவள் சோர்வே இல்லாதவள்.