நாளொரு குறள் – 49

234

நாள் : 49
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : இல்வாழ்க்கை
செய்யுள் :9

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. .

இப்பொழுது முடிவுரை எழுதும் பகுதிக்கு வந்து விட்டார் வள்ளுவர்.

ஒரே அடி. நெத்தி அடி.

அறம் என்றால் என்ன? இல்லற வாழ்க்கைதான் அறம். அறம்தான் இல்லற வாழ்க்கை. இல்லறம் இன்றி இல்லை இன்னொரு அறம்.

அப்படி ஒரு அறம் செய்யும் பொழுது பழி வருமா?

அய்யா பழி வராது. பிறன் என்பதை மற்றவர் என மொழிபெயர்த்தது வள்ளுவரின் தவறல்ல!

பிறன் என்பது பிறர் செய்யும் அறம். மற்றொருவரின் செயல். மற்ற இல்லறத்தார் மற்ற வாழ்வியல்பினர் செய்யும் அறக்காரியங்களை பழிக்கவும் கூடாது

ஆக இன்னொருவர் செய்யும் பணியில் குறை அறிந்தால் அதைப் பழிக்காதே என்கிறார் வள்ளுவர்.

குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருந்தார்கள் என வசனம் ஞாபகம் வரலாம்.

பிறர் செய்யும் செயலில் தவறு இருந்தால் அதை சரி செய்ய உதவ வேண்டுமே தவிர பழிக்கக் கூடாது.

இல்லறத்தான் அறம் செய்ய வேண்டும். அதோடு பிறரின் அறங்களை பழிக்காமல் அவருக்கும் உதவினால் இன்னும் நன்று.

உதாரணமாக பக்கத்து வீட்டுக்கு விருந்தினர் வருகிறார். அவரால் இயன்றது விருந்தினரின் பசி தீர்க்கவில்லை என்றால் அவன் அறத்தைப் பழிக்காமல், தன் பொருளை கொடுத்து உதவுதல் வேண்டும். அது இன்னும் சிறப்பு.