தம்பிகளே… தங்கைகளே…

தம்பிகளே! தங்கைகளே!
இங்கே ஓடிவாரீர்!
அன்புடனே அக்கா சொல்லும்
அறிவுரையைக் கேளீர்!

அடுத்தவர்கள் பொருளின்மீது
ஆசை வைக்காதீர்!
அடுத்துக் கெடுக்கும் வேலையினை
என்றும் செய்யாதீர்!

சிறிய சிறிய விஷயங்களில்
சினமும் கொள்ளாதீர்!
பெரியவர்சொல் புறக்கணித்து
எதுவும் செய்யாதீர்!

முதியோரையும் காலத்தையும்
மதித்திடல் வேண்டும்,
சதிசெய்யும் கூட்டாளியை
விலக்கிடல் வேண்டும்!

சிக்கனமும் சேமிப்பும்
இளமையில் வேண்டும்,
பக்குவமாய்ப் படித்துநாளும்
பண்பட வேண்டும்.