நாள் :4
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 4

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டு மிடும்பை யில

விருப்பு வெறுப்பு அற்ற இறைவனடி சேர்ந்தவர்க்கு ஒரு பொழுதும் துன்பம் இல்லை.

வேண்டுதல் – அது வேண்டும் இது வேண்டுதல் என ஆசைப்படல்

வேண்டாமை – அது தீட்டு, இது தாழ்ச்சி, இது இகழ்ச்சி என மத ஜாதி, இன, மொழி இன்னும் இதர பிரிவினை சொல்லி மற்றதைப் பழித்து அழித்தொழிக்க நினைத்தல்

இலானடி சேர்ந்தார்க்கு – இப்படி வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு

யாண்டும் இடும்பை இல – எப்பொழுதும் துன்பம் இல்லை.

ஒரு நல்ல தலைவன் யார், அவனை பின்பற்றினால் என்ன நடக்கும் என்பதைத் தெளிவாகச் சொல்கிறார்.