கண்ணியமாகப் பேச வேண்டிய பெண்ணியம்

நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றுவரை நமது சமுதாயத்தில் ஒரு கேள்வி ​வலம் வந்து கொண்டிருக்கிறது . பழங்காலத்தில் தொடங்கி , சங்க காலம் கடந்து , யதார்த்த நிலையை உணர்ந்து , விஞ்ஞானம் வளர்ந்து, பல சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்தும் அந்த விடை தெரியா வினா மட்டும் தொடர்ந்து நீடிக்கிறது. அது என்னவெனில், சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமம்தானா ……..இருவருக்கும் சம உரிமை உள்ளதா …யாருக்கு அதிகாரம் , பொறுப்பு அதிகம் இருக்கிறது என்பது தான்.

இன்னும் இதற்கு சரியான தீர்வோ அல்லது பதிலோ கிடைக்கவில்லை. இதையே தலைப்பாக கொண்டு இந்த காலத்திலும் பட்டிமன்றங்கள் ,விவாதங்கள் , சர்ச்சைகள் , வழக்குகள் நடைபெறுவதை நாம் காண்கிறோம். நாம் அவற்றை ஊடகங்கள் அல்லது திரைப்படங்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது. ஆனால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சுயமரியாதை இழக்க விரும்பாமல், கௌரவத்திற்காக ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்க மனமில்லாமல் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம் என்பதுதான் உண்மை.

மனிதராக பிறந்த எவருமே ஒன்றுதான் மண்ணில் ..பாலினத்தால் பிரிக்கப்படுவதை , ஆண் என்பதால் உயர்ந்தவர், வலிமை மிக்கவர், வாழத் தகுதியானவர் என்றும் பெண் என்றால் பலவீனமானவர், அணைத்து தகுதியிலும், ஆற்றலிலும் ஆணைவிட குறைவானவர் என்ற ஒரு மாயை சமுதாயத்தில் நிலவி வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் காப்பியங்களிலும், கவிதைகளிலும், கதைகளிலும் கற்பனையாக வடிக்கப்பட்ட பெண் கதாபாத்திரங்கள் பற்றி தொடர்ந்து கூறப்படுவதும், மக்கள் அதை நம்புவதும் ஆகும். நாம் மென்மையான பெண்களைப் பற்றியும் படிக்கிறோம், பல வீராங்கனைகள் பற்றியும் படிக்கிறோம், வாழ்ந்ததை அறிகிறோம். ஆனாலும் ஆண்களுக்கு பின்தான் பெண்கள் என்கிற எண்ணம் ஆழ்மனதில் தேங்கி கிடப்பதால், வேரூன்றி தழைத்து இருப்பதால் அந்த பக்குவம், இருபாலாரும் சமம் என்பதை ஏற்க மறுக்கிறோம். இதுதான் யதார்த்தம்.

நாம் வாழும் காலத்திலேயே சாதனை புரிந்த பல பெண்கள் இருந்தும் உளவியல் ரீதியாக ஒப்புக்கொள்வதில்லை சமூகம் என்பதுதான் உண்மை. 


உலக மகளிர் தினம் என்று அன்று ஒருநாள் மட்டும் சம்பிரதாயத்திற்காக, ஊரோடு ஒத்துப்போக, விளம்பரத்திற்காக, ஏதோ ஒருவகை சுயநலத்திற்காக, பெருமைக்காக கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால் வாழ்வியல் நடைமுறையில், குடும்பத்தில், சமுதாயத்தில் நிலையாக பெண்களை ஆண்களுக்கு இணையாக அல்லது சமநிலையுடன் காண்பதில்லை, நடத்தவில்லை என்பது யதார்த்தம்.

பதவியில் உள்ள பெண்களை மட்டும் வேறுவழியின்றி மதிக்கிறோம் போற்றுகிறோம். ஆனால் அந்த உயர்ந்த பதவியில் உள்ள பெண்களுக்கே வீட்டில் என்ன நிலை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். நான் பெண்களுக்காக ஆதரவாக, வக்காலத்து வாங்கிடவோ இதனை கூறவில்லை. நான் எனது அனுபவத்தில் கண்டதை, காண்பதை வைத்தே கூறுகிறேன். நான் அரசியல்வாதியும் அல்ல பெண்கள் ஆதரவு கோரிடவும் …அவர்களின் அனுதாபத்தை பெற்றிடவும்.

பொதுவாக அனைவருக்கும் பெண்ணினத்தை சார்ந்த உறவுகள் உண்டு … தாய் தமக்கை, தாரம் மற்றும் நட்பு ரீதியில்.

பெண் சுதந்திரம் கொடுப்போம். பெண்ணினத்தைக் காப்போம் என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை. பெண்களைக் காக்க ஆண்கள் ஒன்றும் ஆபத்பாண்டவர்கள் அல்ல. பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்க பெண்கள் ஒன்றும் அடிமைகள் அல்ல..

பெண்மை போற்றுவோம் போன்ற பதங்கள் கூட தேவை இல்லாத ஆணிகளே. பிடுங்கி எறியப்பட வேண்டியவையே. ஆணும் பெண்ணும் சரி நிகர் என்ற நிலைப்பாடு அற்றவர்களே அப்படிச் சொல்வார்கள்.

அவ்வைப் பாட்டி சொன்னதை பாருங்கள்.. தாயில் சிறந்ததொரு கோயில் இல்லை.. என்று சின்ன அவர் அடுத்த அடியில் தந்தை  சொல் மிக்க மந்திரம் இல்லை என்றார். யாரையும் தெய்வம் என்று சொல்ல வில்லை. கோயிலும் மந்திரமும் ஒன்றை ஒன்று விஞ்சியதில்லை.  ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விஞ்சியவர்கள் இல்லை.

நாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். எங்கள் தலைவர் சொன்னபடி நடந்தால் போதும்.

“ஆணும் பெண்ணும் ஒத்திசைவாக ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் – கௌரவத்தையும் மதித்து, குடும்ப வாழ்வின் பொறுப்புக்களைப் பகிர்ந்து, சமூகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்து, பரஸ்பர புரிந்துணர்வுடன் பற்றுக்கொண்டு வாழ்ந்தால், இந்தப் பால்வேறுபாட்டால் எழும் பல்வேறு முரண்பாடுகள் நீங்கும்” – மேதகு பிரபாகரன் அவர்கள்.