நாளொரு குறள் – 38

நாள் : 38
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அறன்வலியுறுத்தல்
செய்யுள் :8

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும் என்பார்கள்…

இங்கு திருவள்ளுவர் மறுபிறப்பை பற்றியோ அல்லது மோட்சத்தைப் பற்றியோ பேசவே இல்லை என்பது என் கருத்து.

வாழ்க்கைப் பாதை கரடுமுரடானது… மேடுபள்ளங்கள் உண்டு… எத்தனையோ இடர்கள் உண்டு…

உங்களுடைய அடுத்த அடியாகிய நாளையை கல்பாவப்பட்ட சமதளமாக இன்றைய அறம் மாற்றிவிடும்.

தூங்கப் போகும் வரை நீ செய்யும் அறம் நாளை விழித்த பின் செல்லும் பாதையைச் சமமாக்கி வைத்துவிடும்.

வாழ்க்கை என்னும் இந்த வழி கற்கள் பாவிய சமபாதையாக இருக்க வேண்டுமா? கழியும் ஒவ்வொரு நாளும் அறம் செய்யா நாளாக இல்லாமல் இருக்கச் செய்தால் அதுவே உங்கள் வாழ்க்கைப் பாதையை சமமாக்கி உங்கள் வாழ்க்கைப் பயணத்தை எளிதாக்கிவிடும்.

அறம் செய்தால், தினமும் அறம் செய்தால் வாழ்க்கைப் பயணத்திற்கான பாதையை சிறப்பாக அது அமைத்துவிடும். அதனால்தான் அதை வாழ்நாள் வழியடைக்கும் என்றார்.

மறுபிறவி பற்றி பேசுவதென்றால் எழுநாள் தோறும் என்றிருப்பார்.