வெ(ள்)ளாண்மை செய்வோம்.

“தாய்மை” என்பது தாயுடனோ இறையுடனோ அல்லது ஒரு பெண்ணுடனோ மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட சொல் அல்ல.

தலைவன், தந்தை, தமையன், தம்பி போன்றோரும் எம்மிடையே தாய்மை உணர்வுடன் மிளிர்கின்றார்கள்.

அஃதே,

“ஆண்மை”என்பது ஆணுடன் மட்டும்
மட்டுப்படுத்தப்படும் சொல் அல்ல!

பெண்கள் “ஆண்மை”யுடன் விளங்குகின்றார்கள்.

குறிப்பாகச் சொல்வதானால்,

எம் மண்ணில் பெண் போராளிகள் “பேராண்மை” பொங்க வியன்களங்களை வழிநடத்தி விந்தை இதுவென எமை வியக்க வைத்திருக்கின்றார்கள்.

ஆம்,

அடிப்படையில் ஆண்மை என்பது ஆளுந்தன்மையைக் குறிக்கும் சொல்
ஆகும்.

பொய்யா மொழி சொன்ன வள்ளுவன் நல்கிய ஆண்மையின் வகைகள் பல உண்டு.

அவையாவன,

1)இல்லாண்மை
2)ஊராண்மை
3)ஒப்புரவாண்மை
4)காரறிவாண்மை
5)சான்றாண்மை
6)தாளாண்மை
7)நல்லாண்மை
8)புல்லறிவாண்மை
9)பேராண்மை
10)மடியாண்மை
11) வினையாண்மை
12)வேளாண்மை

இவற்றினைவிடவும் நாங்கள் அவாவி நிற்கும் இறையாண்மை உட்பட ஆண்மையை அடிப்படையாக கொண்ட பல சொற்கள் எம் செம்மொழியில் உண்டு.

ஆனால்,

யான் ஆராய வந்த சொல் “வேளாண்மை” ஆகும்.

பன்னெடுங்காலமாக வெப்பம் அல்லது வெம்மை கூடிய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்கள் வெள்ளத்தை சரியாக ஆளுகை செய்தார்கள்.

குளங்கள், குட்டைகள், கேணிகள் ஆகியவற்றுடன் மித மிஞ்சிய நீரை கடலுக்கு அனுப்பும் வெள்ளவாய்க்கால்கள் அனைத்தும் வெள்ளத்தை ஆண்ட/ஆளுகை செய்த எம் முன்னோர்களின் அறிவாண்மை பொருந்திய தடங்கள் 🐾 அல்லது சுவடுகள்🐾 ஆகும்.

ஆதலால்தான் அவர்கள் ஏராண்மை பெருக்கி உணவுப் பற்றாக்குறை இன்றி வாழ்ந்தார்கள்.

“வெள்ளம்+ ஆண்மை (ஆளுகை)” ஆகிய இரு சொற்கள் புணர்ந்து வெள்ளாண்மை என ஆகியது.

உ+ம் : வெள்ளம் + ஆண்மை = வெள்ளாண்மை

பின்னர் திரிபடைந்தே “வேளாண்மை” ஆகியது.

தமிழீழ பொருண்மீய மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பெருந்தகை அடியேனிடம் சொன்னதை நினைவுபடுத்தி விடையத்துக்கு வருகின்றேன்!

ஆறு, குளம் இல்லையே என சோர்ந்து வீழ்ந்து போகாதவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள்.

யாழ்ப்பாணத்தவர் பாறை பிளந்து பயிர் செய்த விற்பன்னர்கள்.

வடக்கே வெள்ளதால் அவதியுறும் மக்கள் இனிவரும் காலங்களில் சரியான திட்டமிடலுடன் வெள்ளம்தனை ஆளுகை செய்ய திடசங்கற்பம் பூணவேண்டும் என வேண்டுகின்றேன்.🙏