அமிழ்தினிய அமிழ்தலில் தமிழீழ அமுதம்.

“தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
******* ********* ****************

எங்கள் தேட்டக்கணக்கின் பெயர் “அமுதம்“.

எங்கள் பொத்தகக் கடையின் பெயர் “அறிவமுது“.

எங்கள் உள்ளூர் தயாரிப்பான பசுந்தாள் பசளையின் பெயர் “பயிரமுது

எங்கள் தமிழீழ வானொலி நிகழ்ச்சி ஒன்றின் பெயர் “ஈரமுது

எங்கள் பாசறை நண்பனை “ஊரமுதன்” என உவகை பொங்க அழைத்தோம்.

எங்கள் அருகே வெஞ்சினம் கொண்டு அஞ்சா நெஞ்சுடன் களமாடிக் கொண்டிருந்த தங்கையை “அருதருவி” என அன்பாய் கூப்பிட்டோம்.

எங்கள் தேசத்தில் பெண் மகவு பிறந்தால் “அமுதா“என பெருமை
பொங்க பெயர் சூட்டினர் பெற்றோர்.

எங்கள் தேசத்தில் ஆண் மகவு பிறந்தால் அமுதன், அறிவமுதன், ஊரமுதன் பெயர் சூட்டினர் பெற்றோர்.

அழகு தமிழில் பெயர் வைத்த தமிழீழ குடிமக்களின் குழந்தைகளுக்கு தமிழீழ வைப்பகத்தினர் ஊக்குவிப்பாக ரூபா 500 வைப்பில் இட்டனர்.

அமுதம்“எனும் சிறார் கணக்கு பொத்தகத்தை தமிழீழ வைப்பகத்தினர் தேடிவந்து பெருமையுடன் வழங்கினர்.

எங்களின் எங்களுக்காய் உழைத்த
தமிழீழ வைப்பகத்தினர் கைலாகு தந்து பெற்றோர் எங்களின் கரங்களில் “அமுதம்” தந்தனர்.

தேவாமுதம்” என்பது தேவலோகத்தில் இல்லை, எம் தமிழர் தேசத்தில்தான் உள்ளதென சகல வழிகளிலும் உணர வைத்தது நமது நடைமுறையரசு!

ஆம்,

“தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

என்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாடலை பாடிக் கொண்டிருக்காமல் அத்தனைக்கும் செயல்வடிவம் கொடுத்தோம்.

“காந்தியும், அம்பேத்கரும் பெரியாரும், எட்டாத வெற்றியை வன்னியில் விடுதலை புலிகள் எட்டினார்கள்….” என எங்கள் எழுத்தாளர் குணா கவியழகன் பதிவு செய்தார்.

அஃதே, பாவேந்தர் பாரதிதாசனின் சிந்தனையை பாடலில் வைத்திருக்காமல் தேடலில் இறங்கினோம்.

பாரதியார் பாடலில் உள்ளதையும், பாவேந்தர் பாடலில் உள்ளதையும் ஆடலில் அரங்கத்தில் முடிப்பதே
தமிழக ,தமிழீழ வரலாறாய் இருந்தது.

ஏட்டையும், பாட்டையும் அரங்கத்தை தாண்டி களத்திலும், தளத்திலும் ஏன்
குக்கிராமங்களுக்கும் கொண்டு வந்த வரலாற்று பெருமையை நாங்கள் கொண்டிருந்தோம்.

பாரதியார் பாடலில் உள்ளதையும், பாவேந்தர் பாடலில் உள்ளதையும்
ஆடலில் முடிக்காமல் தேடலில் கொண்டிருந்தவர் எங்கள்
தமிழ்த் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

பெருந்தலைவன் வழியில் அமுதான தமிழுக்கு உயிரான தமிழுக்கு உண்மையாகவே பல இன்னுயிர்களை கொடுத்தோம்.

நித்தியமானவர்” – அவர்கள்
நினைவுகள் தாங்கியே நாளை
நிமிர்வோம்! 🗽