பரிஸ் நகரின் ஸ்பைடர்மன்…!!!

428

கடந்த சனிக்கிழமை, இரவு 8 மணி இருக்கும். பரிஸ் 18 ம் வட்டாரத்தில் உள்ள, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 4 வது மாடியிலே, நான்கு வயது குழந்தை ஒன்று தவறி கீழே விழப்போகிறது. ஆனால் தெய்வாதீனமாக அக்குழந்தை ஒரு கம்பியிலே பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தது. எந்த நேரத்திலும் விழுந்துவிடும் என்கிற நிலை.

அப்போது கீழே இருந்த ஒரு கெபாப் உணவகத்தில் உதைபந்தாட்டப் போட்டியினைக் காண வந்திருந்த ஒரு இளைஞனுக்கு மக்கள் கூக்குரல் இடும் சத்தம் கேட்டது. ஓடிச் சென்று வெளியே பார்த்தான். நிலைமை மோசம்.

உடனே மின்னல் வேகத்தில், வெறும் 32 செக்கன்களில் 4 ம் மாடிக்குத் தாவி ஏறி குழந்தையைக் காப்பாற்றி விட்டான். அந்த இளைஞனின் பெயர் Mamoudou Gassama.

குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய இந்த இளைஞனின் வீரச் செயல்தான் இன்று பிரான்ஸ் முழுவதும் பேச்சு. ‘பரிசின் ஹீரோ’ என ஊடகங்களும் மக்களும் போற்றிப் புகழ்கிறார்கள்.

பரிஸ் முதல்வர் ஆன் இதால்கோ ‘ 18 ம் வட்டாரத்தின் ஸ்பைடர்மான்’ என்று புகழ்ந்துள்ளார்.

இந்த இளைஞனுக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கோரிக்கைகள் குவிகின்றனவாம்.

சுயநலம் மிக்க உலகில் இத்தகைய அரியோரைக் காண்பது மகிழ்ச்சி. நிற்க, முரட்டுத்தனம் இருக்கும் இடத்தில் இரக்கமும் இருக்கும் என்பதுக்கு இவரைப் போன்ற பல ஆபிரிக்க தேசத்தவர் சாட்சி.