கலைஞரின் போரெழுத்து

432

நீர் எழுத்துக் கவியெழுதும் எனைப் பிடித்து – அணி
சீர் எழுத்துப் புலவரிடை நிறுத்தி விட்டார்
கார் எழுத்து மழையாகும் – மழையின்
பார் எழுத்து ஆறாகும் – ஆற்றின்
நேர் எழுத்தே குளமென்போம்; கிணறென்போம் – இதற்கெல்லாம்
வேர் எழுத்து கடலென்பார்; தலையில்
யார் எழுத்து என நைவார் விடுவார் கண்ணீர்
பார், எழுத்தை மாற்றுகிறேன் எனச் சொல்வார் வியர்வைப்
போர் எழுத்தால் விதியை வெல்வார்.

 

கலைஞரின் சொல்லாடல் என்றுமே கனிச்சுவைதான்..

நிலையற்ற கவிதை எழுதும் எனை பெருங்கவிகளுக்கு நடுவில் நிறுத்தி விட்டார்கள் என அவைக்கு அடங்கி,

வானம் மழையை எழுதுகிறது (பொழிகிறது). அந்த மழையால் உருவாவதே ஆறெனவும், ஆற்றிலிருந்து பிறப்பவையே குளம், கிணறு எனவும்… கூறும் கவி இவைக்கெல்லாம் மூலம் கடல் என அறிவியல் பேசுகிறது. எல்லாம் தலைவிதியென்போருக்கு கண்ணீரே காணிக்கை என்றும், இதுதான் தலை எழுத்தா.. பார்.. அதை மாற்றிக் காட்டுகிறேன் என்போர் வியர்வை சிந்தி உழைத்து விதியை வெல்வர் என்கிறது..

வியர்வை போர் எழுத்தென்ற கலைஞர் எனும் கார் மீண்டும் பொழியட்டும்..